Monday, September 3, 2012

தாண்டியா வளர்க்கும் கலாசாரம்


உணவு, மொழி, உடை, பேச்சுவழக்கு போன்ற பல்வேறு விஷயங்களில் மனிதர்கள் பிரிந்துபட்டுக் கிடந்தாலும், இந்தியன் என்ற ஒற்றுமை உணர்வு நம்முள் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்த உணர்வுகளை வளர்க்க மிக உறுதுணையாய் இருப்பதில் இசைக்கும், நடனத்திற்கும் எப்போதும் மிக முக்கிய பங்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த வகையில் தாண்டியா நடனம் வட இந்தியர்களின் பாரம்பரிய நடனம் என்றாலும், அந்த நடன அமைப்பு, உடையலங்காரம், ஆடும் விதம் ஆகியவை தென் இந்தியர்களையும் கவர்ந்து உள்ளது. அதனால்தான் தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆடம்பர திருமண நிகழ்ச்சிகளில் தாண்டியாவும் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது. தாண்டியா நடனம் குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனம் ஆகும். ஆண்டுதோறும் வரும் நவராத்திரி பண்டிகையில் துர்க்கையின் புகழ்பாடி பக்தர்கள் இரண்டு கைகளிலும் குச்சிகளை வைத்துக்கொண்டு, இசைக்குத் தகுந்தவாறு ஆடுவார்கள். இப்படித்தான் தாண்டியா நடனம் மக்களிடையே பரவ ஆரம்பித்தது. ஆனால், நாளடைவில் கலாசார மாறுதல்களுக்குத் தகுந்தவாறு இந்த நடனம் மக்கள் மகிழ்வான தருணங்களில் ஒன்று கூடும் இடங்களில் இந்த நடனம் பார்வையாளர்களின் கவனத்தை கவருவதற்காகவும், மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வகையிலும் இந்த நடனம் தற்போது ஆடப்பட்டு வருகிறது. பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் இந்த நடனம் தற்போது ஆடப்பட்டு வந்தாலும், அந்த நடனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இருக்கத்தான் செய்கிறது.
வட குஜராத் மட்டுமல்லாமல் வட இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் இந்த தாண்டியா நடனம், தமிழகத்தின் பழங்கால கோலாட்டத்தில் இருந்து வந்ததுதான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். தமிழக கேரள எல்லை வனப்பகுதியில் வசித்து வந்தவர்கள்தான் காணிக்காரர்கள் எனும் பழங்குடியின மக்கள். இன்னமும் இவர்கள் வனப்பகுதியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. காணிக்காரர்கள் சமூகத்தில் தலைவரை மூட்டுக்காணி என்று அழைப்பார்கள். ஓணம் பண்டிகையின் போது, இவர்கள் ஊர் பொதுவிடத்தில் பிரம்மாண்டமான கோலாட்டத்தை நடத்துவார்கள். ஒவ்வொருவர் கையிலும் நீண்ட குச்சிகள் இருக்கும். கண்டிப்பாக இந்தக் குச்சிகள் அனைத்தும் கொரண்டி, கன்னங்கயிஞ்சி, சீதவெற்றம் ஆகிய மரங்களின் கம்புகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அடர்நத காட்டுப் பகுதிகளில்தான் இந்த மரங்கள் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரத்தில்இருந்து பெறப்பட்ட குச்சிகளை வைத்து தட்டும்போதுதான் ஒலி அளவு அதிகமாக இருக்கும் என்பது அவர்களின் எண்ணம். இந்தக் குச்சிகள் மிகவும் பளபளப்பாக இருக்கும்.
காணிக்காரர்களின் கோலாட்டத்தின்போது, காடுகளின் செழிப்பு, சிறப்பு, இயற்கை, விலங்குகள் அவர்களின் குல தெய்வங்கள் என்பன பாடுபொருளாக இருக்கும். இப்படித்தான் கோலாட்டம் தொடக்கக் காலத்தில் இருந்தது. காணிக்காரர்களின் சமூக மக்கள் அனைவரும் கூட்டமாக சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் இந்த நிகழ்வு பல்வேறு தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்ததால், கோலாட்டம் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. காணிக்காரர்கள் மட்டுமே ஆடிவந்த கோலாட்டம் அடுத்ததாக பல்வேறு சமூக மக்களாலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், பிற சமூக மக்கள் கோலாட்டத்தை புராணங்கள், இதிகாசங்களை பாடுபொருளாக வைத்து அமைத்தார்கள். தற்போது தமிழகத்தில் கிருஷ்ணர் பிறந்த நாளன்று சமயச் சடங்காகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இக்கலையை திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே நிகழ்த்தி வந்தனர். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கும் இசையும் ஆட்டமும், உச்சத்தை நெருங்கும்போது மிக வேகமான ஆட்டமும், இசையும் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இக்கலை சிற்சில வேறுபாடுகளுடன் வட மாநிலங்களில் தாண்டியா என்ற பெயரில் தற்போது நிகழ்த்தப்படுகிறது.
கோலாட்டத்தில் ஒற்றைக் கம்பால் அடித்து ஆடுவது, இரட்டை கம்பால் அடித்து ஆடுவது என கோலாட்டத்தில் இரண்டு வகைக் கலையாடல்கள் உள்ளன. அதேபோல பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி, கோலாட்டம் என மூன்று வகையான கலையாடல்கள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
கோலாட்டம் வந்ததற்கு புராணக்கதை ஒன்றும் கூறப்படுகிறது. தேவர் உலகம் போர்க்களமாக மாறிக்கிடக்கிறது. தேவர்களை அழித்து ஒழிப்பது மட்டும்தான் தன் பிறப்பின் லட்சியம் என்ற உறுதியோடு போரிடுகிறான் பந்தாசுரன் என்ற கொடூர அரக்கன். பந்தாசுரனை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற நோக்கோடு களத்தில் போரிடுகிறார்கள் தேவர்கள். இந்தப் போரில் தேவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதர்காக பார்வதியம்மை ஒன்பது நாட்கள் கடும் தவம் புரிந்தாள். கடும் தவத்தால் பார்வதியின் பொலிவான முகம் அழகொழிந்து கருமை நிறமாக மாறிவிடுகிறது. அதிர்ந்துபோன சிவபெருமான் பல முயற்சிகளை மேற்கொண்டும் கருமைநிறம் களையவில்லை. பார்வதியின் தோழிகள் வருத்தமுற்று, நந்திதேவனை வணங்கி அவர் முன் கழிகளை ஆட்டியும், அடித்தும் நடனமாடினர். அவ்வாறு அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும்போதே பார்வதியின் முகத்தில் படர்ந்திருந்த கருமை அழிந்து பழைய பொலிவு முகத்தில் கூடி வந்ததாக கோலாட்டத்தின் பெருமை சொல்லப்படுகிறது.
இதே கதையின் பின்புலம்தான் தாண்டியா நடனத்திலும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் தாண்டியா தமிழக கலையில் மறுபிம்பம் என்று சொல்வதை நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம். மக்களை மகிழ்விப்பதற்காகவும், உறவுகளையும், சகோதரத்துவத்தையும் ஒரு நடனம் வளர்க்கிறது என்றால், அந்த நடனத்தை நாம் கொண்டாடித்தானே ஆகவேண்டும். அந்த வகையில் தாண்டியா இந்திய கலாசார அடையாளங்களில்  என்றும் ஒரு மைல்கல்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

சங்கீத ஊர் திருவையாறு!



கட்டும் ஆடைகளும், உண்ணும் உணவும் மட்டும்தான் கலாசாரங்களா.. என்று சொன்னால், நிச்சயம் இல்லை என்ற பதில் மட்டுமே வரும். இசையும் ஒரு நாட்டின் கலாசாரமாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது கர்நாடக சங்கீதம் வளர்த்த திருவையாறு.
பாப் ரக இசை, ராக் ரக இசையைக் கேட்டவுடனேயே இவையெல்லாம், மேற்கத்திய நாடுகளின் இசை என்று டக்கென்று சொல்லிவிடுவோம். அப்படியானால், இசை ஒரு நாட்டின் கலாசாரம் என்பது சரிதானே. அந்த வகையில் கர்நாடக சங்கீதம் என்பது இந்திய கலாசாரத்தின் அடையாளம். இன்னும் ஆழமாக சொன்னால், கர்நாடக சங்கீதத்திற்கு இலக்கணம் வகுத்துத் தந்த தியாகராஜ சுவாமிகள்  மறைந்த திருவையாறு ஊர் கூட கலாசார சின்னம் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒரு கிறிஸ்தவருக்கு ஜெருசலேம் செல்வது எப்படி வாழ்நாள் லட்சியமோ, அதேபோல ஒரு இந்துவுக்கு காசி புனித யாத்திரையும், ஒரு இஸ்லாமியருக்கு மெக்கா புனித பயணம் என்பது ஒரு வாழ்நாள் லட்சியமோ அதேபோல கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் அனைவருக்கும், திருவையாறில் தியாக பிரம்மம் தியாகராஜ சுவாமிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டும், அவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் தியாகராஜ கீர்த்தனைகள் பாடுவதுதான், கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இசைக்கலைஞர்களின் வாழ்நாள் லட்சியமாக இருக்கும்.
கர்நாடக சங்கீதம் இந்து வேதங்களில் இருந்து உருவானது. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கர்நாடக சங்கீதம் இந்தியாவில் மக்களிடையே பாடப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. ஆனால், அப்போது அதற்கான நெறிமுறைகள், வரையறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை. பெயரளவில் மட்டும் இருந்ததாலோ என்னவோ, அந்த சங்கீதத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. ஆனால் 14 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் புரந்தர்தாசா  என்பவர் கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு வரையறையை அமைத்துக்கொடுத்தார். கர்நாடக சங்கீதத்திற்கான அடிப்படைகளை  புரந்தர்தாசர் வகுத்தபடியால் இவரை கர்நாடக சங்கீதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவருக்குப் பின்னர் வந்த வெங்கடேஷ்வரா என்பவர்தான் ராகங்களின் அடிப்படைகளை வகுத்துக்கொடுத்தார். புரந்தர் தாசாவின் காலம் 1564 ஆம் ஆண்டோடு முடிவடைந்தது. 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில்  விஜயநகரப் பேரரசு வளர்ச்சியடைந்தகாலத்தில் தஞ்சை மாவட்டத்தில் கர்நாடக சங்கீதம் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. அந்தக் காலக்கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீதத்திற்கு தனி இலக்கணம் அமைத்துக் கொடுத்தவர்தான் தியாகராஜ சுவாமிகள்.
18ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டுகளில் கர்நாடக சங்கீத வளர்ச்சிக்கு பக்கபலமாய் இருந்ததுகர் மைசூர் சமஸ்தானமும், திருவாங்கூர் சமஸ்தானமும்தான். 18 - 20 ஆம் நூற்றாண்டின் இடைவெளியில்தான் கர்நாடக சங்கீதத்திற்கு வாய்ப்பாட்டு மட்டும் அல்லாமல் பாட்டுடன், இசைக்கும் முக்கியத்துவம் வளர ஆரம்பித்தது. இசைக்கலைஞர்கள் பாட்டோடு வீணை, வயலின் , கடம், புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க  ஆரம்பித்தார்கள். ஆகமொத்தத்தில் இன்று நாம் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் வாத்தியங்கள் பயன்படுத்தப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்த பெருமை மைசூர் சமஸ்தானத்திற்கும், திருவாங்கூர் சமஸ்தானத்தையுமே சாரும்.
கர்நாடக சங்கீதம் என்பது கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழகம் போன்ற தென் மாநிலங்களுக்கும் பாத்தியப்பட்டது என்று பொதுவாக சொல்லப்பட்டாலும்,கர்நாடக சங்கீதத்தின் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும் ஒரே பெயர் திருவையாறு மட்டும்தான்.
1759 முதல் 1847ம் ஆண்டு வரை தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த காலத்தை, “தியாகராஜ சகாப்தம்’ என்றுதான் சொல்வார்கள். திருவாரூரில் வசித்த ராமபிரும்மம் - சாந்தாதேவி தம்பதிக்கு மூன்றாவது தெய்வக் குழந்தையாக அவதரித்தார் தியாகராஜர்.  குடும்பச் சூழ்நிலையின் காரணமாக பிற்காலத்தில் இவரது  குடும் பம் திருவையாறுக்கு இடம் பெயர்ந்தது.
தியாகராஜ சுவாமிகளின் தந்தையின் ரத்தத்திலேயே ஊறிப் போன விஷயம் சங்கீதம். எனவே, இவருக்கு இசையுணர்வு இயற்கை சுபாவமாக அமைந்தது. குரல் வளமும் கை கொடுத்தது. தாயாரிடம் ராமதாசர், புரந்தரதாசர் கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டார். திருவையாறிலுள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். மிகுந்த புலமை பெற்றார். தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜியின் அரசவைக் கவிஞர் சொண்டி வெங்கட ரமணய்யா விடம் சங்கீதம் கற்றார் தியாகராஜர். “நமோ நமோ ராகவாய அதிசம்’ என்பது தான் அவரது முதல்பாடல். சங்கீதத்திலுள்ள தன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, நாரத மந்திரத்தை உபதேசித்தார். அவர், “ஸ்வராவர்ணம்’ என்ற அரிய நூலைத் தந்து, சங்கீத ஸ்வர ரகசியங்களை அறியச் செய்தார்.
அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். அதில், ஒருவர் செய்த தவறுக்காக அவரைக் கோபித்துக் கொண்டார். அப்போது அவரது மனைவி, கோபப்படுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினார். அதை மையமாகக் கொண்டு எழுந்த பாடலே புகழ் பெற்ற, “சாந்தமுலேக சவுக்கியமுலேது’ என்பதாகும். ராமனைப் பற்றி மட்டுமே பாடிய அவர், சிவபக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, “சம்போ மஹாதேவ’ போன்ற பாடலையும் பாடினார்.
அவரது புகழ் பரவியதைப் பொறுக்காத சகோதரர் ஜப்யேசன், அவரது பாடல் தொகுப்புக்கு தீ வைத்து விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அழிந்து விட்டன. ராம விக்ரகத்தையும் திருடிச் சென்று காவிரியில் போட்டார். தியாகராஜர் துடித்தார். “அநியாய முஸேயகுரா ரானிது ராது’ என்ற பாடலை உருக்கமாகப் பாடினார். ராமன் கனவில் தோன்றி, தான் ஆற்றுமணலில் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லவே, அதை எடுத்து வந்தார். உடனே, “தொரிகிதிவோ’ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) என்ற பாடலைப் பாடினார்.  ராமனே கதியாக வாழ்ந்த அவர், பகுளபஞ்சமியன்று  காலமானார். தியாகராஜருக்கு குரு மரியாதை எப்பவுமே உண்டு. தான் வாழும்போது தன்  சீடர்களுக்கு அவர் ஒரு கட்டளையிட்டிருந்தார். தன் காலம் முடியும் தருவாயில் தன் சடலத்தை தன் குருவின் சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார். அவர் இட்ட கட்டளையின் பெயரில் அவரின் குருவின் கல்லறைக்குப் பக்கத்திலேயே இவரது சமாதியும் அமைக்கப்பட்டது. பெங்களுரூவைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர், 1925ல் தியாகராஜருக்காக  கட்டிய சமாதியில்தான், தற்போது தியாகராஜ ஆராதனை விழா நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜ சுவாமிகள் நினைவு நாளில் இந்த ஆராதனை விழா நடைபெறும். இந்த விழாவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் நூற்றுக்கணக்கானோர், தியாகராஜ கீர்த்தனைகளை மனமுறுகிப் பாடுவார்கள். கர்நாடக சங்கீதத்தை உயிராக நேசித்து, சங்கீதம் கற்றவர்களுக்கும், கற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், இனி கற்கப்போகிறவர்களுக்கும், இந்த ஆராதனைவிழாவில் பாடுவதுதான் வாழ்நாள் லட்சியமாய் இருக்கும். அப்படிப்பட்ட இசை ஆராதனை விழாவைக் காண வெளிநாட்டுப் பயணிகள் கூட சமீப காலங்களில் வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால், கர்நாடக சங்கீதம் வளர்த்த திருவையாற்றை இந்திய அடையாளங்களில் ஒன்று சொல்வது மிகையாகாததுதானே!


கேரளத்து கதகளி!


ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அடையாளம். அந்த அடையாளம் அவனுடைய குணத்தை, பண்பை, செயலைக் காட்டும். அது, உடுத்தும் உடையாக இருக்கலாம். பேசும் பேச்சாக இருக்கலாம். உண்ணும் உணவாக இருக்கலாம். அதேபோல நாட்டின் கலாசாரம் ஒவ்வொரு மாநிலங்களின் தனித்தனியான அடையாளங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகத்தான் இருக்கிறது. அது, உணவு, உடை, அலங்காரம், நாட்டியம் கட்டடக்கலை போன்ற பல்வேறு கூறுகளாக ஒரு மாநிலத்தின்  கலாசார அடையாளமாக தனித்து நிற்கிறது.
அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தின்  பெயரைச் சொன்னவுடன், முகத்தில் கலர் கலராக வண்ணம் தீட்டி, கண்களை உருட்டி உருட்டி ஆடும், கதகளிதான் சட்டென்று கண்முன் வந்துபோகும். கதகளி என்பது கேரள மாநிலத்தின் கலாசார நடனம் என்றாலும், இந்த நடனத்தின் ஆரம்பப்புள்ளி இருந்தது கொல்கத்தாவில்தான். கதகளி நடனம் தோன்றியே கதையே கொஞ்சம் சுவராஸ்யம்தான்.
அது 17ஆம் நூற்றாண்டு. கேரள மாநிலத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விளங்கிய பகுதிதான் கொட்டாரக்கரா. இந்தப் பகுதியை தம்புரான் என்ற மகராஜா ஆண்டுகொண்டிருந்தார்.  தம்புரான் மகராஜாவிற்கு எப்போதும் நடனம், நாட்டியம், நாடகம் போன்றவற்றின் மீது அலாதிபிரியம். ஒரு முறை கல்கத்தாவிற்கு வணிக நோக்கில் பயணம் மேற்கொண்டிருந்தார்.  தம்புரானிற்கு புதிதாக ஏதாவது ஒரு இடத்திற்குச் சென்றால், அந்த இடத்தின் பாரம்பரியங்களை தெரிந்துகொள்வதில் முழுமையாக நேரத்தை செலவிடுவார்.
அன்  தன் அமைச்சர்கள் சகாக்களுடன்  வீதி உலா வந்துகொண்டிருந்தார். அப்போது வீதியில் கடவுள் கிருஷ்ணனின் கதையைச் சொல்லும் கிருணன் ஆட்டம் எனும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. உலா வந்த தம்புரான் நாட்டியத்துடன் கூடிய அந்த கிருஷ்ணன் கதை சொல்லும் நிகழ்ச்சி ரொம்பவே பிடித்துப்போயிற்று. கிருஷ்ணன் ஆட்டம் முடியும் வரை பொருமையாக இருந்து வேடிக்கை பார்த்தவர், நாட்டிய அரங்கேற்றம் முடிந்த உடன் அந்த நடனக் கலைஞர்களை சந்திக்கச் சென்றார். அந்த நடனக் குழுவின் தலைவர் பெயர் சமோரின். சமோரின் கிருஷ்ணரின் தீவிர பக்கதர். கிருஷ்ணன்  மீது உள்ள காதலால், கிருஷ்ணர் பற்றி சமஸ்கிருதத்தில் பல்வேறு கதைகளை எழுதியுள்ளார். கதைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், கிருஷ்ணரின் வாழ்க்கையை நடனத்தோடு கதையை சொல்ல ஆரம்பித்தார். அதுதான் கிருஷ்ணன் ஆட்டம் என்ற பெயரில் உருவானது. சமோரினிடம், தம்புரான்  கிருஷ்ணன் ஆட்டம் வந்த கதைகளைப் பற்றி கேட்டதோடு மட்டுமல்லாமல், அந்த நடனக் குழுவை அப்படியே கேரளத்திற்கு அழைத்து வர திட்டமிட்டார்.
இது சம்பந்தமாக சமோரினிடம் போய் கேட்டிருக்கிறார். ‘கேரளத்தில் இந்த நடனத்தை பிரபலப்படுத்த வேண்டும். கிருஷ்ணனின் வாழ்க்கை சரித்திரத்தை பட்டித்தொட்டியெல்லாம் கேரளத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் கேரளத்திற்கு வந்து , எங்கள் சமஸ்தானத்தில் தங்கியிருந்து கிருஷ்ணன் ஆட்டத்தை பிரபலப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். ஒரு மகாராஜா தன்னிடம் வந்து இப்படி கேட்டதற்கு சமோரினுக்கு பெருத்த மகிழ்ச்சிதான். ஆனால், அப்போது கேரளத்திற்கும், கல்கத்தாவிற்கும் இடையே உள்ள அரசியல் சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தால், சமோரின் நடனக் குழுவை தம்புரானால் உடனடியாக கேரளத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
கேரளத்திற்கு வந்த பிறகும் தம்புரானால், மனம் கிருஷ்ணன் ஆட்டத்தை விட்டு வெளிவரவில்லை. எப்படியாவாது அதேபோன்றதொரு ஒரு நாட்டிய நாடகத்தை கேரளத்திலும் உருவாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சில நாட்டியக் கலைஞர்களை வைத்து ராமன் ஆட்டம் எனும் புது வகை நாட்டியத்தை உருவாக்கினார். கிருஷ்ணன் ஆட்டம் முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. ஆனால், ராமன் ஆட்டத்தின் முழு கதையும் மலையாளத்தில் உருவாக்கப்பட்டது. முதல் பகுதி முழுவதையும் தம்புரானே எழுதினார். ராமன் ஆட்டம் உருவாக்கியதில் தம்புரானுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  ராமன் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைய ஆரம்பித்தது. ராமன் ஆட்டத்திற்கு பல்வேறு எழுத்தாளர்கள் கதை எழுத ஆரம்பித்தார்கள்.  ராமன் ஆட்டம் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களை உருவாக்கிய பெருமை எழுத்தாளர் இறையம்மன் தம்பியையே சாரும். காலங்கள் ஓட ஆரம்பித்தன . ராமன் ஆட்டம் எனும் நாட்டிய நாடகம் ஆட்டகதா என்ற பெயரில் (ஆட்டத்துடன் கதை கூறுவது என்று பொருள்) அந்த நாட்டியம் மெருகேற தோன்றியது. இந்த நடனத்தை மேலும் மெருகேற்றவும் நாட்டிய நாடகத்தை ஊரெங்கும் பரப்ப பெரிதும் பாடுபட்ட பெருமை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மகராஜாவா ஸ்வாதி திருநாள் ராம வர்மாவையே சேரும்.
தம்புரான் உருவாக்கிய ராமன் ஆட்டம், ஆட்டகதா நாட்டிய நாடகம்தான் கதகளியாக மாறியது.  17 ஆம் நூற்றாண்டு நாட்டிய நாடகமான இன்றிருக்கும் கதகளியில் கடவுள்தான் கதாநாயகர்கள்.  நடிப்பு, நடனம், அபிநயம், இசை, வாத்தியம் வாசித்தல் எனும் ஐந்துக் கலைகளை உள்ளடக்கியதுதான் கதகளி. இந்த ஐந்து கலைகளையும் தெரிந்த ஒருவரால் மட்டும்தான் கதகளியை திறம்பட ஆட முடியும் என்பது கதகளியின் கூடுதல் சிறப்பு. கதகளியில் கிட்டத்தட்ட 101 கதைகள் சொல்லப்பட்டாலும், முக்கியமாக பெரும்பாலான மேடைகளில் ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகள் மட்டுமே சொல்லப்பட்டு வருகிறது. ஊடகங்கள் பெருகாத அந்தக் காலக்கட்டத்தில், கேரளத்தில் கதகளி விடிய விடிய மக்கள் பார்த்து ரசிப்பார்களாம். ஆனால், தற்போது ஊடகங்கள் பெருகி இருந்தாலும், கதகளியின் ரசிப்புத் தன்மை மட்டும் இன்னும் கேரளத்து மக்களிடையே குறையவில்லை என்பது கூடுதல் சிறப்பு. ஆனால், கதகளி அரங்கேற்றம் மட்டும் இரவில் இரண்டில் இருந்து நான்கு மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது.
கதகளி நாட்டிய நாடகம் பற்றிய ஆராய்ச்சி கேரளத்தில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கதகளியில் கதாபாத்திரங்கள் அணிந்துவரும் நகைகள், புறத்தோற்றம், முகபாவங்களை வெளிக்காட்டுதல், நடன அசைவுகள் இவைகள் எல்லாம் தம்புரான் மகாராஜா 15 ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலத்தில் உள்ள மட்டஞ்சேரி பகுதி கோயிலில் உள்ள சிற்பங்களின் அடிப்படையாக வைத்து நடனத்தை அமைத்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் புராணக்கதைகளை  நாட்டியம், நடனம், இசை, அலங்காரத்துடன் அட்டகாசமாக பட்டிதொட்டியெல்லாம் பரப்பியதோடு, தங்கள் மொழியின் உச்சரிப்பையும், தங்கள் மாநில கலாசாரத்தை மக்கள் மத்தியில் பரப்பிய கதகளி, இன்னும் பல நூற்றாண்டுகள் கேரத்தின் பெருமையை பறைசாற்றும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

போர்க்களத்தில் பிறந்த வில்லுப்பாட்டு!


ஒவ்வொரு மாநிலத்தையும்.. ஏன் ஒவ்வொரு நாட்டையும் தனியாக அடையாளப்படுத்த இசை, நடனம், ஓவியம், பேச்சு, உடை, கட்டடம் என்று ஒவ்வொன்றும் கருவியாய் இருக்கிறது. இதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டகள் தவிர்த்து, கிழக்கு கேரளம் வரை மக்கள் வாழ்வியலோடு கலந்த ஒரு விஷயம்தான் வில்லுப்பாட்டு.
வில்லுப்பாட்டு என்பது இசையோடு புராணங்கள், பக்தியை சொல்லும் இசை நிகழ்ச்சி என்றுதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால், வரலாற்றில் வில்லுப்பாட்டுக்கு தனியொரு இடம் உண்டு. இந்தத் தலைமுறையினர் வரை ஓரளவிற்கு அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் வில்லுப்பாட்டு, நாகரிக வளர்ச்சி, ஊடகங்கள் பெருக்கங்களினால் அடுத்த தலைமுறை தெரிந்துகொள்ள முடியாத அழிவுறும் விளிம்பு நிலைக்கு  வில்லுப்பாட்டு என்ற ஒரு கலை தள்ளப்பட்டுவிடுமோ அச்சம் நம்மிடம் தொற்றிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை.
தென் தமிழக மாவட்டங்களில் சிறு தெய்வ வழிபாட்டுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருவது எல்லோரும் அறிந்ததே. பெரும்பாலும் ஏப்ரல் மே மாதங்களில்தான் சிறு தெய்வங்களை வழிபடும் திருவிழாக்கள் அதிக அளவில் தென் மாவட்டங்களில் ஊருக்கு ஊர் நடைபெறும். இந்த திருவிழாக் காலங்களில் ஒவ்வொரு சிறுதெய்வ கோயில்களிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு என்று தனியொரு இடம் உண்டு. ஒவ்வொரு கோயிலிலும் சிறு தெய்வங்களுக்கு பூஜைகள் இரவு 7 மணியில் ஆரம்பித்து 8 மணிக்கு முடிந்துவிடும். அதையடுத்து நடு இரவு ஒரு மணிக்கு சாமி காடு செல்லும் சடங்கு நடைபெறும். அதையொட்டி நடுநிசி பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையை பார்க்க பக்தர்கள் விழித்து இருப்பதற்காக, சிறு தெய்வ சிலைக்கு நேர் எதிராக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் சிறு தெய்வகளின் புராணக் கதைகளை கூறுவார்கள். தமிழர்களின் பண்பாடு, உணவு பழக்க வழக்கங்கள், உறவு முறை எல்லாமே இந்தக் கதையோடு ஒட்டி நகைச்சுவை கலந்து மெட்டு இசைத்துப் பாடுவார்கள் வில்லுப்பாட்டு கலைஞர்கள்.
இன்று கோயில்களிலும் திருவிழாக்களிலும் காணும் வில்லுப்பாட்டு வந்த கதை கொஞ்சம் சுவராஸ்யமானது. கிட்டத்தட்ட இரண்டாம் நூற்றாண்டு காலம் அது. மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்ட காலம். விலங்குகளை வேட்டையாட அந்தக் காலக்கட்டத்தில் மனிதன் வில் போன்ற ஆயுதத்தையே பயன்படுத்தினான். தான் தேடிச்சென்ற விலங்கு கிடைக்காதபோதும், வேட்டை சரியாக அமையாதபோதும், தங்கள்  சோர்வு தெரியாமல் இருக்க, வில்லை கவிழ்த்தி, காய்ந்த சருகுகளை ஓட்டையிட்டு அதை வில்லின் நாணில் கோர்த்து, கைகளை நாணில் தட்டி இசைப்பார்களாம். வில்லுப்பாட்டு முதன் முதலில் அரங்கேறியது நடுக்காட்டில் விலங்குகளை வேட்டையாடியபோதுதான்.
காலங்கள் உருண்டோடியது. விலங்குகளை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த வில், போர் ஆயுதமாக உருவெடுத்தது. போர் வீரர்கள் போர்க்களத்தில் சோர்ந்து போய் நின்றுகொண்டிருக்கும்போது, ஏதேனும் ஓர் போர் வீரன் வில்லை தலைகீழாய் கவிழ்த்தி அதில் மணிகளை கோர்த்து, போர் வீரர்களின் சோர்வை நீக்கவும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் வகையிலும், தங்கள் சாகசங்களையும், தங்கள் மூதாதையர்களின் போர்த்திறமைகளையும், போரில் வெற்றிபெற்ற கதைகளையும் உரக்க  சப்தமிட்டு பாடுவார்களாம். இந்த வீர எழுச்சிப் பாட்டைக் கேட்டும் ஒவ்வொரு வீரருக்கும் வீரம் கொப்பளிக்குமாம். சோர்வை விரட்டி, போரில் சண்டையிடுவார்கள் என்கிறது வரலாற்று ஆய்வேடு.  எந்த இலக்கணத்திற்கும் உட்படாமல், குரலும், மனமும் போன போக்கில் உக்கிரமான மகிழ்ச்சியை அள்ளித்தரும் விஷயமாகத்தான் வில்லுப்பாட்டின் முதற்படி அமைந்தது.
15 ஆம் நூற்றாண்டின் காலத்தில் அரசர்களின் புகழ் பாட அரசவையில் அருதக்குட்டி எனும் புலவரால் வில்லுப்பாட்டுக்கு இலக்கணம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால், புலவரின் பெயர் குறித்த சர்ச்சையும் வரலாற்று ஆய்வாளர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எந்த வரலாற்று ஆய்வாளர்களும், 15 ஆம் நூற்றாண்டில் வில்லுப்பாட்டக்கு இலக்கணம் வரையறுக்கப்பட்டதை யாரும் மறுக்கவில்லை. வில்லுப்பாட்டு ஒரு வடிவத்திற்கு வர ஆரம்பித்தது. கி.பி. 1550 ஆம் ஆண்டிற்கு பிற்பகுதியில்தான்.
 வில்லுப்பாட்டு, வில்லடி, வில்லு, வில்லடிச்சான் பாட்டு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் வில்லுப்பாட்டின் முக்கிய அங்கமாக விழங்கும் வில்லானது ஆரம்ப காலக்கட்டத்தில் முற்றிலும் பனை மரத்தாலேயே செய்யப்பட்டது. வேறு வேறு மரங்களில்  வில் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பனை மரத்தில் செய்யப்பட்ட வில்லில் இருந்து கிடைக்கும் இசையின் நயம், மற்ற மரங்களில் அமைக்கப்பட்ட வில்லில் கிடைக்கவில்லையாம்.  நடுவில் தடிமனாகவும், இரண்டு ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் இந்த வில்லின் ஓரங்களில் நாண் ஏற்றப்பட்டு, மணிகள் தொங்கவிடப்பட்டு இசைக்கப்படுகிறது. இந்த வில்லுடன், கடம், ஜால்ரா போன்றவை பக்க வாத்தியமாக இருந்தாலும், பாடுபவரின் குரலை உச்சஸ்தாயிலுக்கு கொண்டு சென்று மேடையை தெய்வீகமயமாக்கியது உடுக்கை என்ற இசைக்கருவிதான். ஆனால், தற்போது அரங்கேற்றப்படும் வில்லுப்பாட்டில் உடுக்கை பயன்படுத்துவது இல்லை மாறாக தபேலா, ஆர்மோனியம், பம்பை போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வில்லுப்பாட்டில் ஆறு இசைக்கலைஞர்கள் இருப்பார்கள். இதில் ஒருவர் நகைச்சுவை கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பார்? ஒருவர் ஆமாம் என்று சொல்லிக்கொண்டே சிலேடை கேள்விகளை கேட்பார். மற்றவர்கள் இசைக்கருவிகளை இசைக்க ஒருவர் முக்கியக் கதையை பாட்டோடு இசைத்து பாடுவார். மன்னர்களின் வரலாறு, புராணக்கதைகள், சிறு தெய்வ வரலாறு என்பது மட்டுமே முன்னர் வில்லுப்பாட்டுக்கு பாடு பொருளாக இருந்தது. ஆனால், தற்போது காலத்திற்கு தகுந்தவாறு வில்லுப்பாட்டில் அறிவியல் விஷயங்களும் பாடுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரையறுக்கப்பட்ட மெட்டுக்கள் கிடையாது; குரலில் இனிமை வேண்டும் என்ற கட்டுப்பாட்டும் கிடையாது; இசையை முறைப்படி கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இப்படி இசைக்கே உண்டான அத்தனை முக்கிய அம்சங்களையும் புரந்தள்ளிவிட்டு, பார்ப்பவர்களின் எண்ணங்களை தூண்டி, கலாசாரத்தை வளர்க்க உதவியாய் அமைந்ததுதான் வில்லுப்பாட்டு. இன்றளவேணும் தென் மாவட்ட மக்களின் மனதில் நீக்கமற நிறைந்துகிடக்கும், வாழ்வியலையும், பண்பாட்டையும் இசையோடு பேசு மொழியில் மனதில் பதியவைத்த இந்த வில்லுப்பாட்டு தமிழர்களின் கலாசார அடையாளங்களில் ஒன்றுதானே!

Saturday, June 9, 2012

பேனா செய்த உதவி!


நாமக்கல் அருகே உள்ள நல்லிப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் ஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தனது பிரச்சினையத் தெரிவித்துள்ளார். விக்னேஷ் ஒரு தொழிற்கல்வி படிப்பில் இரண்டாண்டுகளை முடித்துவிட்டு மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவர், நல்லிப்பாளையம் UCO  வங்கியில் கல்விக் கடன் பெற்று  படித்து வருகிறார்அவர்  வட்டிக்கு அரசு அளிக்கும் மானியம் பெறத் தகுதியானவர். ஆனால் கடந்த இரண்டாண்டுகளுக்கான வட்டியைக் கட்டினால்தான் மூன்றாமாண்டுக்கான கடன் தொகையைத் தரமுடியும் என வங்கி மேலாளார்  கண்டிப்பாகச் சொல்லி விட்டார். கல்லூரி திறக்கிற நேரமானதால் அவரது பெற்றொருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.கந்து வட்டிக்காரர்களிடம் 36 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி வங்கியில் பணம் கட்டிவிட்டனர்.


கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு. இந்தத் தகவல்களைச் சென்ற வாரப் புதிய தலைமுறையில்  வெளியிட்டிருந்தோம்
கல்விக் கடன் பெறுவது எப்படி என்பது பற்றிய தகவல்களைத் திரட்டி கிருஷ்ணா எழுதியிருந்தார். அதில் Education Loan Task force (ELTF) என்ற அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீநிவாசனின் பேட்டியையும் வெளியிட்டிருந்தோம்

புதிய தலைமுறையைப் படித்த விக்னேஷ்  ஸ்ரீநிவாசனை ஜூன் 7ம் தேதி இரவு  தொடர்பு கொண்டு தனது பிரச்சினையத் தெரிவித்துள்ளார். ஸ்ரீநிவாசன் மறுநாள் வங்கி மேலாளரை போனில் தொடர்பு கொண்டு விதிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் வங்கி மேலாளார் ஆணவமாகப் பதில் சொன்னதாக ஸ்ரீநிவாசன் தெரிவிக்கிறார். “நீ யார் கிட்ட வேணா போய்ச் சொல்லிக்கோ, வட்டி கட்டினால்தான் பணம் கொடுக்க முடியும் அது எங்கள் பாங்க் விதிகள் அப்படித்தான் சொல்கின்றனஎன்று சொல்லிவிட்டார்.

உடனே ஸ்ரீநிவாசன் மேலதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அவரது மின்னஞ்சலில் புதிய தலைமுறைக் கட்டுரையையும் குறிப்பிட்டுள்ளார். அன்று மாலை (ஜூன் 8)  வங்கியின்  துணைப் பொது மேலாளர் திரு வெங்கடாச்சலம் ஸ்ரீநிவாசனுடன் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்கிறார். சிறிது நேரத்தில்  வங்கிக் கிளை மேலாளரே விக்னேஷைத் தொடர்பு கொண்டு  அடுத்த செமிஸ்டருக்கான கல்விக் கட்டணத்திற்குரிய  வரைவோலையை வாங்கிக் கொள் என்று சொல்லியிருக்கிறார். 9ம் தேதி விக்னேஷ் வங்கிக்குச் சென்று வரைவோலையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்.
இது போல் இன்னும் எத்தனை மாணவர்களுக்கு நடந்திருக்குமோ என்ற தன் கவலையை ஸ்ரீநிவாசன் வங்கி நிர்வாகத்திடம் தெரிவிக்கிறார். ஜூன் 9ம் தேதி மாலை கோவை மண்டல மேலாளர் பாஷா தான் திங்கள் கிழமை  (ஜூன் 11ம் தேதி) வங்கிக் கிளைக்கே சென்று விசாரணை நடத்த இருப்பதாக ஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார்.

புதிய தலைமுறையால் ஒரு மாணவனுக்கு விடிந்திருக்கிறது. இன்னும் பலருக்கும் தீர்வு கிடைக்கலாம்.

Tuesday, February 14, 2012

திரைப்படத்திற்கு அடையாளம் தந்த வங்காளம்



ஒரு நாட்டின் கலாசாரம் அந்நாட்டின் ஒவ்வொரு மாநில தனிப்பட்ட கலாசார மொத்த மதிப்பீட்டின் சராசரியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஒரு நாட்டின் உடை, உணவு, நாகரிகம் மற்றும் கலைகள்தான் ஒரு கலாசாரத்தின் அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மேற்கு வங்காளத்தின் திரைத் துறை, நம் இந்தியாவின்  கலாசார அடையாளமாக விளங்கிவருகிறது.
இன்று திரைத்துறையில் 2டி, 3டி, கிராபிக்ஸ், மிக்ஸிங் என்று பல்வேறு தொழில்நுட்பங்களை, ஹாலிவுட் பட அளவிற்கு நாமும் முன்னேறிவிட்டாலும், இந்தத் திரைப்படங்களுக்கெல்லாம் அரிச்சுவடி எழுதப்பட்டது மேற்குவங்காளத்தில் கொல்கத்தாவில்தான் (அதாவது அப்போது உள்ள கல்கத்தா).   ஒரு திரைப்படம் என்றால் எப்படி இருக்கவேண்டும்? என்பதும், கதை, ஒளிப்பதிவு, பாடல்கள் என்று ஒவ்வொன்றாக இந்திய திரைத்துறைக்கு கற்றுத் தந்தது மேற்கு வங்க சினிமா துறைதான்.
18 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கு அது. தெற்கு ஆசியாவில் சினிமா என்றாலே விஷயம் தெரிந்தவர்கள் சொல்லும் பெயர்கள், இந்திய சினிமாவை பொறுத்தவரை அது மேற்கு வங்காளத்தில் உள்ள கல்கத்தாவையும், வங்கதேச சினிமாவை பொறுத்தவரையில் டாக்காவையும்தான் சொல்வார்கள். ஏனெனில் 1890 ஆம் ஆண்டு பயோஸ்கோப் முறையில், ஒளிக் கலவையை காட்சியாக மக்கள்மத்தியில் இதுதான்  சினிமா என்கு உச்சரிக்க வைத்தது கல்கத்தாவில்தான். ஹிராலால்சென் என்பவர்தான் முதன்முதலில் ராயல் சினிமாஸ்கோப் சினிமா கம்பெனி எனும் நிறுவனத்தை முதன்முதலில் தொடங்கினார்.
 அதுவரை வீட்டில் ரேடியோ பெட்டியை மட்டும் காதில் வைத்துக்கொண்டிருந்த அவ்வூர்வாசிகள் வீதிக்கு வந்து ஒரு பெட்டிக்குள்  ஒளிக்கற்றைக்கு ஊடே படச்சுருள் காட்சிகள் பிம்பங்களாய் வந்துபோவதை ரசிக்க ஆரம்பித்தனர். பயாஸ்கோப் அடைந்த வெற்றித்தான் வங்காள திரைப்பட வளர்ச்சி உலக அளவிற்கு செல்ல அடித்தளமாய் அமைந்தது.
1918 ஆம் ஆண்டு வாக்கில் திரேந்திரநாத் கங்குலி என்பவர் இந்தோ பிரிட்டிஷ் பிலிம் அண்ட் கோ எனும் கம்பெனியை உருவாக்கினார். பெங்காலியில் சொந்தமாக ஒரு படக் கம்பெனி உருவானது அப்போதுதான். இந்த நிறுவனம் வெளியிட்ட முதல் திரைப்படம் பில்லாத் பெராத். இந்த திரைப்படம் இந்த நிறுவனம் தொடங்கி மூன்று ஆண்டு காலத்திற்குப் பிறகு வெளியானது. ஆனால், அதே மாநிலத்தின் மாடன்  தியேட்டர் என்ற நிறுவனம்  1919 ஆம் ஆண்டு பல்வாமங்கள் எனும் திரைப்படத்தை வெளியிட்டது. இந்தப் படம்தான் வங்காளத்தில் வெளியான முதல் முழுநீள திரைப்படம். அதற்குப் பிறகு மாடன் தியேட்டர் நிறுவனம் 1931 ஆம் ஆண்டு அமர் சௌதாரி இயக்கத்தில் ஜமாய் சாஸ்தி எனும் திரைப்படத்தை வெளியிட்டது. இந்தப் படம்தான் வங்காளத்தில் வெளியான முதல் பேசும் திரைப்படம் ஆகும்.
இன்று நம்மவீட்டு குட்டீஸ்கள் சின்னத்திரையில் வரும் விளம்பரப் படங்களை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே.. இந்த விளம்பரப் படத்திற்கு முதல் அடித்தளமிட்டது கல்கத்தாவில்தான். ஹிராலால்சென் என்பவர்தான் முதன்முதலில் விளம்பர திரைப்படத்தை கல்கத்தாவில் அறிமுகப்படுத்தினார். ஹிராலால்சென் வெளியிட்ட அந்த விளம்பரப்படம்தான், இந்தியாவின் முதல் விளம்பரப் படம் என்று இன்றுவரை போற்றப்படுகிறது.  1931 கால கட்டத்தில் வங்கமொழி திரைப்பட துறையில் புகழின் உச்சியில் இருந்தவர்கள், பிரம்மதீஸ் பரூவா மற்றும் தீபகி போஸ் என்பவர்கள்தான். பரூவா நிறைய படங்களை இயக்கியிருக்கிறார். இன்று நாம் பார்க்கும் நவீன சினிமாவிற்கு அடையாளம் கொடுத்தவர் பரூவாதான். அதேபோல தீபகி போஸ் 1932 ஆம் ஆண்டு சந்திதாஸ் எனும் திரைப்படத்தை இயக்கினார். படத்தில் வசன இடைவெளியில் உள்ள அமைதியை குறைக்க முதன்முதலில் பின்னணி இசையை இந்திய சினிமாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
அதுபோல இந்தியாவில் முதல் ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தந்த சத்யஜித்ரே என்ற மாபெரும் திரைப்பட இயக்குனரை தந்ததும் மேற்கு வங்க சினிமா துறைதான். 20 ஆம் நூற்றாண்டில் திரைப்படத் துறையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதும் இவர்தான். எழுத்தாளர், புத்தக வெளியீட்டாளர், ஓவியர், கிராபிக் டிசைனர், மற்றும் திரைப்பட இயக்குனர் என்ற பன்முக திறமை கொண்ட ரே இயக்கிய படங்கள் மொத்தம் 37. இவர் இயக்கிய முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி 1955 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மொத்தம் 11 சர்வதேச விருதுகளைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனிதநேய திரைப்படம் என்ற பெயரையும் பெற்றுத்தந்தது. இவருடைய திரைப்பட வாழ்வில் 32 தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். திரைப்படத் துறையில் இவரின் சாதனையைப் பாராட்டி 1992 ஆம் ஆண்டு, இந்திய அரசு சத்யஜித் ரேக்கு பாரதரத்னா விருது வழங்கி கௌரவித்தது.
மனிதர்களின் உணர்வுகளையும், இந்திய கலாசாரத்தையும் தன்னுடைய படத்தில் காட்டுவதை எப்போதும் தவறியதில்லை ரே. தாகூர் பற்றிய இவரின் டாக்குமென்ட்ரி திரைப்படம் இன்றுவரை பாராட்டுதலுக்குரியதாக விளங்குகிறது. வாழ்க்கை சார்ந்த படங்கள் மட்டுமல்லாமல், வித்தியாசமான திகில் படங்கள், துப்பறியும் படங்களையும் இயக்கி, அதில் வெற்றியும் கண்டார் ரே. இருபத்தி நான்கு மணி நேர ரயில் பயணத்தில் ஒரு கதாநாயகன், கதாநாயகி சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு மட்டுமல்லாமல், அவர்கள் பற்றிய கதையை முழுவதும் ஒரு ரயில் பெட்டியிலே எடுத்து முடித்த சாருலதா என்ற சத்யஜித்ரேயின் படத்தின் வெற்றியை எந்த சினிமா சம்பந்தப்பட்டவர்களாலும் மறக்க முடியாது. இந்தப் படத்தில் நாயகன் வேடத்தில் நடித்திருந்த உத்தம் குமார் மற்றும் நாயகி ஷர்மிலா தாகூர் இருவரும் இந்தியா முழுவதும் பிரபலமானார்கள்.
 வங்காள மொழி திரைப்படத்துறைக்கு கிடைத்த அடுத்த பொக்கிஷம் மிருனாள் சென். மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய மிருனாள் சென், திரைப்பட ஸ்டூடியோவில் ஆடியோ டெக்னீஷியனாக பணிக்குச் சேர்ந்தார். பின்னாளில் சினிமா மீதான காதலில் 1953 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்தை உருவாக்கினார். முதல் படம் வெறும் படமாக மட்டுமே இருந்ததே தவிர அவருக்கு பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தரவில்லை. ஆனால், அவருடைய இரண்டாவது படமான நீல் அக்ஷார் நீச்சி என்ற படம் மேற்கு வங்களாத்தை மட்டுமல்ல சுற்றியுள்ள மற்ற மாநில ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இவருடைய மற்றொரு படமான  பெய்ஸி ஷர்வண் திரைப்படம் சர்வதேச அளவில் புகழைப் பெற்றுத் தந்தது. இந்த சினிமா இந்திய சினிமாவில் புதிய பாணியை ஏற்படுத்தியது என்றுகூட சொல்லலாம். இவருடைய ஒவ்வொரு படமும், கதை, ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் போன்ற ஏதோ ஒரு பிரிவில் ஏதோ ஒரு புதுமையை புகுத்தியிருப்பார். அதுதான் மிருனாள்சென்னின் பாணியாக திரைத்துறையினர் புகழ்பாடுகிறார்கள். இவரது சினிமா கேன்ஸ், வெனிஸ், மாஸ்கோ, கார்லோ வேரி, சிக்காகோ, கெய்ரோ போன்ற நாடுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றுள்ளது. இவரது திரைத்துறைக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக அவருக்கு, இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் கலாசாரம் வாழ்க்கை முறை, நடை, உடை, உணர்வுகள் இப்படி எந்த ஒரு விஷயத்தையும் விட்டுக்கொடுக்காமல் அனைத்தும் திரையில் காட்டி, சர்வதேச அளவில் திரைப்படத்தின் மகிமையை உலகுக்கு உணரச் செய்த மேற்கு வங்காளத்தின் கலாசார அடையாளமாக சினிமாவைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

Tuesday, January 10, 2012

அஸ்ஸாம் முகா பட்டு!





ஒரு நாட்டின் கலாசாரம் என்பது அந்த நாட்டின் பேசும் மொழி, சடங்குகள், அணியும் ஆடைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், உறவுமுறைகள், சாஸ்திரங்கள் இப்படி அனைத்துவகையான அம்சங்களின் ஒட்டுமொத்த கலவைதான்.  இந்தியாவை பொருத்தவரை விருந்தோம்பல், ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் விஷயங்கள்தான் இன்றுவரை கலாசார அடையாளங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
திருநெல்வேலி என்றால் அல்வா, திண்டுக்கல் என்றால் பூட்டு, மணப்பாறை என்றால் முறுக்கு என்று மாவட்டங்களைச் சொன்னதும் அதன் அடையாளங்கள், பெயரை ஒட்டியே சொல்கிறோம் அல்லவா? அதேபோல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதை அடையாளப்படுத்தும் ஒவ்வொரு சிறப்பு விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இந்த இதழில் நாம் பார்க்கப்போகும் மாநிலம், அஸ்ஸாம். இந்தியாவின் வட கடைக்கோடிக்கு அருகே இருக்கும் இந்த மாநிலத்தின் பெயரைச் சொன்னவுடன் நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது டீ. சர்வதேச அளவில் டீ உற்பத்தியில் இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பதற்கு காரணம் அஸ்சாமில் உற்பத்தி செய்யப்படும் டீயை குறிப்பிடலாம். அஸ்ஸாம் என்றாலே டீ என்று சொல்லும் நமக்கு அஸ்சாமின் கலாசார அடையாளமாக இருக்கும் முகா பட்டுப்புடவையைப் பற்றி யாரும் அவ்வளவு பெரிதாக தெரிவதில்லை. ஆனால், டீ யை விட கலாசாரத்திலும், அம்மாநில மக்களின் கௌரவக் குறியீடாகவும் விளங்குவது முகா எனும் பட்டு ரகம்தான் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் திருமணம், அதுவும் காஸ்ட்லி திருமணம் என்றால் யாரும் காஞ்சிபுரம் பட்டுப் புடவையை  விட்டுக்கொடுப்பதில்லை. அதுபோலத்தான் அஸ்ஸாம் முகா பட்டும். சர்வதேச சந்தையில் அஸ்சாமின் முகா பட்டுக்கு ஏக டிமாண்ட் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
தகதகவென ஜொலிக்கும் தங்க நிறம்தான் முகா பட்டுக்கான அடையாளம். முகா என்றால் மஞ்சள் நிறம் என்று பொருள். இந்தப் பட்டுப் புடவை முற்றிலும் தங்க நிறத்தில் ஜிகுஜிகுவென்று ஜொலிப்பதால்தான் இந்தப் பட்டுக்கு முகா என்று பெயர் வந்ததாம். நம்ம ஊர் பெண்கள் பட்டுப்புடவைகளை துவைப்பது என்பதே அரிது. ஏனென்றால், துவைத்தால் சாயம் போய்விடும். ஜரிகை புடவையில் இருந்து  வந்துவிடும். துவைக்க துவைக்க பழைய பட்டுப்புடவை போன்று தோற்றமளிக்கும் என்று பயந்தே பல பெண்கள் பட்டுப் புடவைகளை துவைக்காமலும், அணிந்துகொள்ளாமலும் வாங்கிய பட்டுப் புடவைகளை அப்படியே பத்திரப்படுத்தியே அழகு பார்ப்பார்கள். ஆனால், இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் முகா. இந்தப் பட்டுப்புடவையை துவைக்க துவைக்க இதன் அழகு கூடும். அதேபோல எத்தனை முறை துவைத்து துவைத்து அணிகிறோமோ, அதற்குத் தகுந்தார்போல் புதுப் புடவை போன்று காட்சியளிக்குமாம். பட்டு நூல்களுக்கெல்லாம் ராணி என்று புகழப்படும் முகா பட்டு, இந்தியாவின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில்தான் முதன்முதலில் அடையாளப்படுத்தப்பட்டது. அதற்குப்பிறகுதான் இந்த முகா பட்டு அஸ்ஸாமின் பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தாங்கத்தக்க இந்த பட்டு ரகம், 85 சதவீத புறஊதாக் கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்டதாம். கோடைக்காலத்திற்கு மட்டுமல்லாமல், குளிர்காலத்திலும் இந்தப் பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால், சுகமாக இருக்கும் என்கிறார்கள் அஸ்ஸாம் வாசிகள்.
முகா பட்டுப்புடவையின் முதல் தரம் வெண்மை நிறத்தில் இருக்கும். வெண்மை நிற முகா பட்டுப் புடவைக்கு சர்வதேச பட்டு சந்தையில் எப்போதும் பெரும் வரவேற்பு உண்டு.
முகா பட்டு நூல் அன்ந்திரியா அஸ்ஸாமினிஸ் என்ற பட்டுப் புழுவிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த வகையான புழு அஸ்ஸாமில் மட்டும்தான் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இந்தப் புழுவின் முட்டைப் பருவத்திற்கு அடுத்தப் பருவத்தில் மட்டும் இரண்டு மி.மீ. அளவுக்கு பட்டு நூல் எடுக்க முடியுமாம். ஆனால், இதை சரியாக வளர்க்கும்பட்சத்தில் ஒரு பட்டுப் புழுவிடம் இருந்து மட்டும் 30 மி.மீ. நீளம் வரை பட்டு நூல் எடுக்கமுடியும். இந்த அத்தனை சமாசாரங்களும் நடப்பது வெறும் எட்டு நாட்கள்களில் என்றால் வியப்பாக இருக்கிறதுதானே.
அதுமட்டுமல்லாமல் 1000 பட்டுப் புழுவிலிருந்து 125 கிராம் பட்டு நூலை எடுக்க முடியுமாம். இதை வைத்துக்கொண்டு 750 கிராம் முதல் 1 கிலோ வரையிலான பட்டுப் புடவை தயாரிக்க முடியும் என்கிறார்கள், முகா பட்டு நெசவாளர்கள். அதுமட்டுமல்லாமல் இந்தப் பட்டு நூலும் ஜூலை - ஆகஸ்ட், செப்டம்பர் - அக்டோபர் மற்றும் நவம்பர் - டிசம்பர் உள்ளிட்ட குறிப்பிட்ட மாதங்களில் மட்டும்தான் புழு உற்பத்தி செய்யும். இதில் முதல் இரண்டு மாதங்களில் கிடைக்கும் பட்டு நூல்தான் தரத்திலும் நிறத்திலும், உயர்ந்ததாக இருக்கும். இந்த நூலுக்குத்தான் உலக பட்டுச் சந்தையில் அதிக விலை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முகா பட்டுப் புடவைக்கு எப்போதும் தனி மவுசுதான். ஜப்பான் நாட்டில் இப்போது வரை முகா பட்டு நூலை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் நெசவாளர்கள்.
உலக அளவில் பட்டுநூல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உற்பத்தியில் 90 சதவீதம் அஸ்ஸாமில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டுநூல் மட்டும் 22 ஆயிரம் டன். இவ்வளவு உற்பத்தி செய்தும் நம் நாட்டில் பட்டு நூல் தேவை இருப்பதால், தற்போது சீனாவிடம் இருந்து 8ஆயிரம் டன் பட்டு நூல் இறக்குமதி செய்தகொண்டிருக்கிறோம். சீனா மட்டுமல்லாமல், உஸ்பெகிஸ்தான், பிரேசில்,வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தும் தற்போது பட்டுநூல் இறகக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். பட்டுவர்த்தகம் மூலம் மட்டும் இந்தியா கடந்த ஆண்டில் சம்பாதித்த வருமானம் ரூ.2,600 கோடி என்கிறார் முகா பட்டு நூல் உற்பத்தியாளர் மேனன்.
சாதாரண மஞ்சள் நிற பட்டுத் துணி, இந்தியாவை சர்வதேச சந்தையில் கவுரவப்படுத்துகிறது என்றால், முகாவை நினைத்து பெருமைப்பட்டுத்தானே ஆகவேண்டும்!