Tuesday, January 10, 2012

நாய்க்கு சிலை எழுப்பிய வீர சிவாஜி!






இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று சொல்வார்கள். ஆனால் கடந்த காலங்களில் நம் தேசத்தில் ஆண்ட மன்னர்கள் ஆட்சி நடத்திய பகுதி, அவர்கள் வணங்கிய கோயில், அவர்கள் வசித்த கோட்டை.. இப்படி அவர்களின் வரலாற்றைச் சொல்லும் அடையாளங்கள் இன்னும் நம்மிடைய இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
அவர்கள் விட்டுச்சென்ற வரலாற்று அடையாளங்கள் இன்று கூட நமக்கு பிரமிப்பின் உச்சக்கட்டம்தான். இவ்வளவு பெரிய மாளிகையை எப்படி கட்டியிருப்பார்கள். இவ்வளவு பெரிய மாளிகையிலா குடியிருந்தார்கள். இவ்வளவு பெரிய கற்களை எல்லாம் எப்படி தூக்கியிருப்பார்கள்  என்று பார்க்கும் ஒவ்வொரு அடையாளங்களும் நமக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பாமல் இல்லை. ஆனால், ஒவ்வொரு வரலாற்று அடையாளங்களும், இன்று நமக்கு  வாழ்க்கையின் பல்வேறு சூட்சுமங்களை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது என்பதை புத்தகத்தில் வரும் புகைப்படங்களையோ தொலைக்காட்சியில் வரும் காட்சித் தொகுப்புகளை  வைத்தோ புரிந்துகொள்ள முடியாது. அத்தகைய வரலாற்று அடையாளங்களை நேரில் போய் பார்க்க வேண்டும். நேரில் சென்று பார்வையிடுவதற்கும், அந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள் குறித்த கூடுதல் தகவல்களையும்தான் இந்தத் தொடரில் வரும் இதழ்களில் பார்க்கவிருக்கிறோம். எல்லாருக்கும் பரிட்சயமான, கேள்விப்பட்ட இடங்களைத்தான் நாங்கள் இந்தப் பகுதியில் சொல்லவிருக்கிறோம். ஆனால், இதுவரை நீங்கள் பார்க்காத புகைப்படங்கள், நீங்கள் கேள்விப்படாத புது தகவல்களை நாங்கள் இங்கு தொகுத்திருக்கிறோம். வாருங்கள்.. வரலாறை ருசிப்போம்.
மராட்டிய மாநிலம் என்று சொன்னவுடனேயே மகாவீரர் சத்ரபதி சிவாஜியும். அவர் சிறுவயதாக இருக்கும்போது, அவருக்கு வீரக்கதைகளை சொல்லி வளர்த்த அவர் தாய் புத்திலிபாய் பெயரும்தான் நமக்கு ஞாபகம் வரும். அப்படிப்பட்ட வீரரின் வாழ்க்கையை பறைசாற்றும் வகையில் இன்றுவரை கம்பீர தோற்றத்தில் காட்சியளிக்கிறது சிவாஜியின் தலைநகராகத் திகழ்ந்த ராய்கட் மலைக்கோட்டை. கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட இந்த மலைக்கோட்டை, சீனப் பெருஞ்சுவரின் மினியேச்சர் என்று கூட சொல்லலாம்.
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் இருந்து தெற்காக 210 கி.மீ., தொலைவில், சஹாயத்ரி மலைப் பகுதியில், ஈட்டி வடிவ பாறைகளின் மீது 5.12 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து பரந்துள்ளது ராய்கட் கோட்டை. ஆரம்பத்தில் ரெய்ரி என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதியை கி.பி.1656ஆம் ஆண்டு கைப்பற்றிய சிவாஜி ராய்கட் என்று புதுப்பெயர் சூட்டினார். நண்பர்கள் எளிதாக வரும் வகையிலும், எதிரிகள் நுழைய முடியாதபடியும், கோட்டையை அமைக்க வேண்டும் என்று ராஜதந்திர நோக்குடன் சிவாஜி அளித்த உத்தரவுப்படி அபாஜிசோன்தேவும் ஹிரோஜி இந்துல்கரும், ஒரே ஒரு குறுகிய வழிப்பாதை கொண்ட இந்த கோட்டையை உருவாக்கினார்.
வரலாற்று சிறப்புமிக்க சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகம் கி.பி.1674ல் இங்குதான் நடந்தது. இதே கோட்டையில்தான் 1689ல் சிவாஜி மரணமடைந்தார். சிவாஜியின் மகன் சாம்பாஜியிடம் இருந்து இந்த கோட்டையை 1689ல் முகலாயர்கள் கைப்பற்றினர். பின்னர், 1818ஆம் ஆண்டில் இதை பிரிட்டிஷார் கைப்பற்றினர்.
கோட்டைப் பகுதியில் பிரமாண்டமான சுற்றுச்சுவர்கள், அரண்மனைகள், சிவாஜி வழிபட்ட ஜகதீஸ்வரர் கோயில், தர்பார் மண்டபம், அரியணை, பெண்களுக்கான அரண்மனைகள், எதிரிகளைக் கண்காணிக்க வசதியாக 12 மாடிகள் கொண்ட கோபுரங்கள், பாதாளச் சிறைகள், சந்தைப் பகுதி கட்டடங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் சிதிலங்கள் இந்திய வரலாற்றின் மகத்தான காலகட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
அரசவைப் பெண்கள் வருவதற்காகவும், அரசக் குடும்பத்து பெண்கள் வருவதற்காகவும் இந்தக் கோட்டையில் சிறப்பு வழி அமைக்கப்பட்டிருக்கிறது, மீனா தர்வாஜா என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நுழைவாயிலை ஒட்டி 6 முக்கிய அறைகள் இருக்கின்றன.ஒன்று சிவாஜியின் தாயான புத்தலி பாயுக்கும் மற்றும் உள்ள ஐந்து அறைகள் அரசக் குடும்பத்து மகளிர்கள் தங்குவதற்கும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
ராணி தர்வாஜாவின் முன் பகுதியின் பால்கி தர்வாஜா அமைந்திருக்கிறது. இது மகாராஜா சிவாஜி வந்து செல்வதற்கான நுழைவாயிலாக அமைந்திருக்கிறது. அந்த நுழைவாயிலை ஒட்டி 8 அறைகள் இருக்கின்றன. இந்த எட்டு அறைகளும் அரண்மனையின் தானியக் கிடங்குகளாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். தானியக் கிடங்குகளுக்கு வலது புரத்தில்தான் சிவாஜி மகாராஜாவின் கோட்டை ஆரம்பிக்கிறது. ராஜ் பவன் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதிதான்  அன்றைய சிவாஜி மகாராஜாவின் சந்தோஷம், துக்கம், வெற்றி, தோல்விகள், சட்டம் இயற்றும் இடமாக இருந்திருக்கிறது. அதற்கான அடையாளங்கள் இன்னும் மிச்ச சொச்சத்தை நேரில் சென்றால் காணலாம்.
ராஜ்பவன் கோட்டையின் உட்புறத்தில் மிகப்பெரிய தண்ணீர் தொட்டிகள் இருக்கின்றன. சத்ரபதி சிவாஜி குளிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அந்த தொட்டிகளின்  அருகே அன்றைய காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மிக  நவீன கழிவறைகளும் இருக்கின்றன. ராஜ் பவனின் கிழக்குப் பகுதியில் பாதாள அறைகள் இருக்கின்றன. இதில்தான் சிவாஜி தன் போர்த் திட்டங்களை முக்கிய தளபதிகளுடன் விவாதித்ததாகவும், தன்  இஷ்ட மாதாவான பவானி தெய்வத்தை அங்குதான்  வழிபட்டதாகவும், சூரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை இங்குதான் சிவாஜி மறைத்து வைத்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த மலைக்கோட்டையின்  சிறிது தொலைவில் உள்ள சித் தர்வாஜா கிராமத்தில் சிவாஜியின் தாய் ஜீஜாபாயின் சமாதி உள்ளது. கோட்டைக்குள் சிவாஜியின் சமாதி உள்ளது. கோட்டைக்குள் ஒரு ஆச்சர்யம். சிவாஜி வாக்யா என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்தார். இந்த நாய் என்றால் சிவாஜிக்கு கொள்ளைப் பிரியமாம். திடீரென்று இந்த நாய் இறந்துவிட ரொம்பவே சோர்ந்துவிட்டாராம். நாயின்  பிரிவை தாங்க முடியாதவர், தான்  தினமும் விழித்தவுடன் தன் செல்லப்பிரானியான வாக்யாவின் முகத்தில்தான் விழிக்கவேண்டும் என்பதற்காகவும், அதன் ஞாபகர்த்தமாகவும் வாக்யாவின் தத்ரூப சிலையை அரண்மனை சிற்பியின் மூலம் செய்தார். வாக்யாவின் சிலையும் இந்த மலைக்கோட்டையில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது.


2 comments:

  1. வணக்கம்
    சிவாஜி மஹராஜுக்கு வீரக் கதைகள் சொன்னவர் தாய் புத்லி பாய் என இருக்கிறது,ஆனால் பின் வரும் கட்டுரையில் அவர் தாய் பெயர் ஜிஜா பாய் என்று இருக்கிறது, அவருடைய பெருமை மிகு தாயின் பெயர் ஜிஜா பாய்,புத்லி பாய் என்பது காந்தியில் தாயார் பெயர்

    ReplyDelete
  2. ராயகட் கோட்டையில் வாக்யா என்ற நாயின் சிலை இருப்பதுஉண்மிதான். ஆணால் அச்சிலையை வைத்தவர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகனான சத்ரபதை ராஜாராம் அவர்கள்...சிவாஜி மகாராஜா இரந்தபோது அவர் உடலுக்கு தீ வைத்ததும் வாக்யா என்ற அந்த நாயும் தன் எஜமானர்மீதிருந்த பாசத்தினால் அந்த தீயில் பாய்ந்து உயிரை மாய்த்துகொன்டது...அந்த நாயை கௌரவப்படுத்த சிலை எழுப்பப்பட்டது.

    ReplyDelete