Tuesday, August 2, 2011

விசித்திர குள்ள மனிதர்கள்!



விடைதெரியாத விஷயங்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. மனிதர்கள் இப்பூமியில் வாழ்ந்ததற்கான அளவுகோலாக ராமர், யேசு, முகமது நபி, புத்தர் காலங்களை வைத்தே கணக்கிட்டு வருகிறோம். அதனால்தானோ என்னவோ, நம் எண்ணங்கள் குறைந்தபட்சம் 2500 லிருந்து 3000 ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழ்ந்திருப்பார்களா என்ற உண்மையை நம்ப மறுக்கிறது. அப்படி நம்பினாலும் அதை ஏதோ கட்டுக்கதையாகவோ, ஒரு அமானுஷ்யமாகவோதான் பார்க்கத் தோன்றுகிறது.
பல லட்சம் ஆண்டுகளாக இந்த பூமி சுழன்று கொண்டு இருக்கிறது. இன்று மனிதர்கள் வாழும் அமைப்பாக இருக்கும் நகரங்கள் அனைத்தும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல் பரப்பாகவும், நதியாகவும் இருந்திருக்கிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய நகரங்களாக இருந்த பரப்பு இன்று கடல் பரப்பாகவும் மாறி இருக்கிறது. பூமி வரைபடத்தை மாற்றி எழுதும் ஆழிப் பேரலையான சுனாமி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வந்துகொண்டுதான் இருந்திருக்கிறது. அந்த அலைகள் மூலம் கண்டம் விட்டு கண்டம் கூட மனிதர்கள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒரு கண்டத்தில் இருக்கும் மனிதர்கள் குட்டையாகவும், மற்றொரு கண்டத்தில் இருக்கும் மனிதர்கள் நெட்டையாகவும் இருக்கிறார்கள் என்று கூட ஆராய்ச்சிகள் கூறுகிறது. விஞ்ஞானம் ஆராய்ச்சிகளை நம்புபவர்கள்தானே நாம். அப்படியென்றால் மேற்சொன்ன விஷயங்களையும் நம்பித்தான் ஆக வேண்டும். இனி சொல்லப்போகும் விஷயங்களையும் நம்பித்தான் ஆக வேண்டும்.
இந்தோனேஷியக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் புளோரஸ் எரிமலைத் தீவில் கூட 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 3 அடியில் மனிதர்கள் வாழ்ந்ததர்கான ஆதாரங்களை இப்போது ஆராய்ச்சிகள் கண்டுபிடித்து கூறியிருக்கின்றன.
இந்தோனேஷியா கிழக்குப் பகுதியில் புளோரஸ் என்ற ஒரு தீவு. இந்த தீவு மலைகளும் காடுகளும் எரிமலைகளும் நிறைந்த ஒன்று. இங்குள்ள கிராமத்தில் வயது முதிர்ந்த பெரியவர்தான் நெல்லிஸ் குயா. இவர் தன் சந்ததிகளுக்கு தனது மூதாதையர்கள் கூறியதாய் சொன்ன விசித்திர கதை இதுதான்.
புளோரஸ் மலைகளுக்குப் பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்கள் பெரிதாகவும் உடல் முழுவதும் ரோமம் மூடியும், மற்றவர்கள் புரியாத மொழியும் பேசுவார்கள். இவர்கள் கிராமத்திற்குள் அடிக்கடி புகுந்து, பயிர்கள், உணவுப் பொருள்கள், பழங்களை திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள். எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்தக் குள்ளர்களை எபுகோகோ என்று அழைப்பார்கள் என்றும் கதை சொல்வார். இது போன்ற கதை இந்தோனேஷியா கிராமங்களில் ஏராளமாய் உண்டு என்பதால் ஆய்வாளர்கள் இக்கதைகளை கற்பனை என ஒதுக்கித் தள்ளினர். ஆனால் 2003ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா வாழ்ந்த கிராமத்திலிருந்து 75 மைல் தொலைவில் ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு, மேற்கண்ட கதைகள் கற்பனையல்ல உண்மைதான் என அறிவித்து உலகத்தை வியக்க வைத்தது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா தொல் பொருள் ஆய்வுக் குழுவினர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் தலைமையில் இவ் எலும்புக் கூட்டுடன் பல மிருகங்களின் எலும்புகளையும் 19 அடி ஆழத்தில் கண்டு பிடித்தனர். முதலில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று நம்பினர். ஏனெனில் மொத்த உயரமே மூன்று அடிதான். இறுதியில் விரிவாக ஆராய்ந்த பொழுது, இது வரை யாரும் அறியாத புதிய மானிட இனம் என்பதை அறிந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய பெண்ணின் எலும்பு.
இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோதான். மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும் சிக்கல் நிரம்பியதாகவும் இருந்திருக்கிறது. இக்கண்டு பிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்கள் மட்டுமே நுட்பமான அறிவு நிறம்பியவர்கள் என்ற கருத்துக்கு மாறாக சிறிய அளவுள்ள மூளையை உடைய இந்த சித்திரக்குள்ளர்கள் வேட்டையாடுதல் வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம் அறிந்தவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த 3 அடி பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இது பற்றி டாக்டர் ரிச்சட் ராபர்ட் கூறும் பொழுது மானிட வரலாற்றில் 18 ஆயிரம் என்பது சமீபமாக ஒன்று. இந்த புதிய இன குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இப்புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறும் அதே சமயத்தில், புளோரஸ் தீவு நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கின்றன. முக்கியமாக பாலி தீவில் இருந்து லம்போக் தீவு, முப்பது கீலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. மேலும் இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே “சேப்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கடல் நீரோட்டமும் ஓடுகிறது. எனவே பாய்மரக் கப்பல் அல்லது இயந்திரப் படகு மூலமாகவே இக்கடல் பகுதியைக் கடக்க முடியும். எனவே கற்கால மனிதர்கள் எப்படி இந்த ஆபத்தான கடல் பகுதியைக் கடந்து புளோரஸ், திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் சென்றார்கள் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே குழப்பம் நீடிக்கிறது.
ஆனால், அறுநூறு அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிலும் இலங்கையிலும் கூட கற்கால மனிதர்களின் எலும்புகளும், கற்கருவிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள், இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்றிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதன் பிறகு கடல் மட்டம் அறுநூறு அடி உயர்ந்ததற்கு நிலத்தின் மேல் இருந்த பனி உருகிக் கடலில் கலந்ததே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் நாலாயிரம் அடி வரை ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளுக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் கற்கால மனிதர்கள் எப்படி சென்றார்கள் என்ற கேள்விக்கு புளோரஸ் தீவிற்கு கற்காலக் குள்ள மனிதர்கள் பாலி தீவில் இருந்து சுனாமி அலைகளால் அடித்துக் கொண்டு வரப்பட்ட மரக் கிளைகள் மூலம் வந்திருக்கலாம் என்கிறார் டிம்வைட் என்ற ஆராய்ச்சியாளர்.
ஆனால், ஆசியக் கண்டத்திலிருந்து நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்தில், இருக்கும் புளோரஸ் தீவிற்கு குள்ள மனிதர்கள் எப்படி சென்றிருப்பார்கள் என்ற கேள்விக்கு, நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியப் பகுதியில் கடல்மட்டம் நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருக்கும். ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கும்.அதன் வழியாகவே கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்திலிருந்து ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு நடந்தே தான் சென்றிருப்பார்கள். அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்திருக்கும்.அதே நேரத்தில் நிலப் பகுதியும் ஆங்காங்கே உயர்ந்ததால், தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதி பல துண்டுகளாக உடைந்ததுடன், கடல் மட்டமும் உயர்ந்ததால் பல தீவுகளாக உருவானது. அதனால் கற்கால மனிதர்களால் தீவை விட்டு வெளியேற இயலாமல் தீவுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இறந்துபோயிருப்பார்கள். என்று குள்ள மனிதர்கள் குறித்து யூகமாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள், ளிவில்லாத ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தக் கதைக்கான முழுவடிவம் இன்னும் ஆராய்ச்சிக்குள்தான் இருக்கிறது. விடை கிடைக்குமா?

No comments:

Post a Comment