Tuesday, January 10, 2012

அஸ்ஸாம் முகா பட்டு!





ஒரு நாட்டின் கலாசாரம் என்பது அந்த நாட்டின் பேசும் மொழி, சடங்குகள், அணியும் ஆடைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், உறவுமுறைகள், சாஸ்திரங்கள் இப்படி அனைத்துவகையான அம்சங்களின் ஒட்டுமொத்த கலவைதான்.  இந்தியாவை பொருத்தவரை விருந்தோம்பல், ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் விஷயங்கள்தான் இன்றுவரை கலாசார அடையாளங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
திருநெல்வேலி என்றால் அல்வா, திண்டுக்கல் என்றால் பூட்டு, மணப்பாறை என்றால் முறுக்கு என்று மாவட்டங்களைச் சொன்னதும் அதன் அடையாளங்கள், பெயரை ஒட்டியே சொல்கிறோம் அல்லவா? அதேபோல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதை அடையாளப்படுத்தும் ஒவ்வொரு சிறப்பு விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இந்த இதழில் நாம் பார்க்கப்போகும் மாநிலம், அஸ்ஸாம். இந்தியாவின் வட கடைக்கோடிக்கு அருகே இருக்கும் இந்த மாநிலத்தின் பெயரைச் சொன்னவுடன் நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது டீ. சர்வதேச அளவில் டீ உற்பத்தியில் இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பதற்கு காரணம் அஸ்சாமில் உற்பத்தி செய்யப்படும் டீயை குறிப்பிடலாம். அஸ்ஸாம் என்றாலே டீ என்று சொல்லும் நமக்கு அஸ்சாமின் கலாசார அடையாளமாக இருக்கும் முகா பட்டுப்புடவையைப் பற்றி யாரும் அவ்வளவு பெரிதாக தெரிவதில்லை. ஆனால், டீ யை விட கலாசாரத்திலும், அம்மாநில மக்களின் கௌரவக் குறியீடாகவும் விளங்குவது முகா எனும் பட்டு ரகம்தான் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் திருமணம், அதுவும் காஸ்ட்லி திருமணம் என்றால் யாரும் காஞ்சிபுரம் பட்டுப் புடவையை  விட்டுக்கொடுப்பதில்லை. அதுபோலத்தான் அஸ்ஸாம் முகா பட்டும். சர்வதேச சந்தையில் அஸ்சாமின் முகா பட்டுக்கு ஏக டிமாண்ட் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
தகதகவென ஜொலிக்கும் தங்க நிறம்தான் முகா பட்டுக்கான அடையாளம். முகா என்றால் மஞ்சள் நிறம் என்று பொருள். இந்தப் பட்டுப் புடவை முற்றிலும் தங்க நிறத்தில் ஜிகுஜிகுவென்று ஜொலிப்பதால்தான் இந்தப் பட்டுக்கு முகா என்று பெயர் வந்ததாம். நம்ம ஊர் பெண்கள் பட்டுப்புடவைகளை துவைப்பது என்பதே அரிது. ஏனென்றால், துவைத்தால் சாயம் போய்விடும். ஜரிகை புடவையில் இருந்து  வந்துவிடும். துவைக்க துவைக்க பழைய பட்டுப்புடவை போன்று தோற்றமளிக்கும் என்று பயந்தே பல பெண்கள் பட்டுப் புடவைகளை துவைக்காமலும், அணிந்துகொள்ளாமலும் வாங்கிய பட்டுப் புடவைகளை அப்படியே பத்திரப்படுத்தியே அழகு பார்ப்பார்கள். ஆனால், இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் முகா. இந்தப் பட்டுப்புடவையை துவைக்க துவைக்க இதன் அழகு கூடும். அதேபோல எத்தனை முறை துவைத்து துவைத்து அணிகிறோமோ, அதற்குத் தகுந்தார்போல் புதுப் புடவை போன்று காட்சியளிக்குமாம். பட்டு நூல்களுக்கெல்லாம் ராணி என்று புகழப்படும் முகா பட்டு, இந்தியாவின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில்தான் முதன்முதலில் அடையாளப்படுத்தப்பட்டது. அதற்குப்பிறகுதான் இந்த முகா பட்டு அஸ்ஸாமின் பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தாங்கத்தக்க இந்த பட்டு ரகம், 85 சதவீத புறஊதாக் கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்டதாம். கோடைக்காலத்திற்கு மட்டுமல்லாமல், குளிர்காலத்திலும் இந்தப் பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால், சுகமாக இருக்கும் என்கிறார்கள் அஸ்ஸாம் வாசிகள்.
முகா பட்டுப்புடவையின் முதல் தரம் வெண்மை நிறத்தில் இருக்கும். வெண்மை நிற முகா பட்டுப் புடவைக்கு சர்வதேச பட்டு சந்தையில் எப்போதும் பெரும் வரவேற்பு உண்டு.
முகா பட்டு நூல் அன்ந்திரியா அஸ்ஸாமினிஸ் என்ற பட்டுப் புழுவிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த வகையான புழு அஸ்ஸாமில் மட்டும்தான் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இந்தப் புழுவின் முட்டைப் பருவத்திற்கு அடுத்தப் பருவத்தில் மட்டும் இரண்டு மி.மீ. அளவுக்கு பட்டு நூல் எடுக்க முடியுமாம். ஆனால், இதை சரியாக வளர்க்கும்பட்சத்தில் ஒரு பட்டுப் புழுவிடம் இருந்து மட்டும் 30 மி.மீ. நீளம் வரை பட்டு நூல் எடுக்கமுடியும். இந்த அத்தனை சமாசாரங்களும் நடப்பது வெறும் எட்டு நாட்கள்களில் என்றால் வியப்பாக இருக்கிறதுதானே.
அதுமட்டுமல்லாமல் 1000 பட்டுப் புழுவிலிருந்து 125 கிராம் பட்டு நூலை எடுக்க முடியுமாம். இதை வைத்துக்கொண்டு 750 கிராம் முதல் 1 கிலோ வரையிலான பட்டுப் புடவை தயாரிக்க முடியும் என்கிறார்கள், முகா பட்டு நெசவாளர்கள். அதுமட்டுமல்லாமல் இந்தப் பட்டு நூலும் ஜூலை - ஆகஸ்ட், செப்டம்பர் - அக்டோபர் மற்றும் நவம்பர் - டிசம்பர் உள்ளிட்ட குறிப்பிட்ட மாதங்களில் மட்டும்தான் புழு உற்பத்தி செய்யும். இதில் முதல் இரண்டு மாதங்களில் கிடைக்கும் பட்டு நூல்தான் தரத்திலும் நிறத்திலும், உயர்ந்ததாக இருக்கும். இந்த நூலுக்குத்தான் உலக பட்டுச் சந்தையில் அதிக விலை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முகா பட்டுப் புடவைக்கு எப்போதும் தனி மவுசுதான். ஜப்பான் நாட்டில் இப்போது வரை முகா பட்டு நூலை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் நெசவாளர்கள்.
உலக அளவில் பட்டுநூல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உற்பத்தியில் 90 சதவீதம் அஸ்ஸாமில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டுநூல் மட்டும் 22 ஆயிரம் டன். இவ்வளவு உற்பத்தி செய்தும் நம் நாட்டில் பட்டு நூல் தேவை இருப்பதால், தற்போது சீனாவிடம் இருந்து 8ஆயிரம் டன் பட்டு நூல் இறக்குமதி செய்தகொண்டிருக்கிறோம். சீனா மட்டுமல்லாமல், உஸ்பெகிஸ்தான், பிரேசில்,வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தும் தற்போது பட்டுநூல் இறகக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். பட்டுவர்த்தகம் மூலம் மட்டும் இந்தியா கடந்த ஆண்டில் சம்பாதித்த வருமானம் ரூ.2,600 கோடி என்கிறார் முகா பட்டு நூல் உற்பத்தியாளர் மேனன்.
சாதாரண மஞ்சள் நிற பட்டுத் துணி, இந்தியாவை சர்வதேச சந்தையில் கவுரவப்படுத்துகிறது என்றால், முகாவை நினைத்து பெருமைப்பட்டுத்தானே ஆகவேண்டும்!



நாய்க்கு சிலை எழுப்பிய வீர சிவாஜி!






இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று சொல்வார்கள். ஆனால் கடந்த காலங்களில் நம் தேசத்தில் ஆண்ட மன்னர்கள் ஆட்சி நடத்திய பகுதி, அவர்கள் வணங்கிய கோயில், அவர்கள் வசித்த கோட்டை.. இப்படி அவர்களின் வரலாற்றைச் சொல்லும் அடையாளங்கள் இன்னும் நம்மிடைய இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
அவர்கள் விட்டுச்சென்ற வரலாற்று அடையாளங்கள் இன்று கூட நமக்கு பிரமிப்பின் உச்சக்கட்டம்தான். இவ்வளவு பெரிய மாளிகையை எப்படி கட்டியிருப்பார்கள். இவ்வளவு பெரிய மாளிகையிலா குடியிருந்தார்கள். இவ்வளவு பெரிய கற்களை எல்லாம் எப்படி தூக்கியிருப்பார்கள்  என்று பார்க்கும் ஒவ்வொரு அடையாளங்களும் நமக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பாமல் இல்லை. ஆனால், ஒவ்வொரு வரலாற்று அடையாளங்களும், இன்று நமக்கு  வாழ்க்கையின் பல்வேறு சூட்சுமங்களை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது என்பதை புத்தகத்தில் வரும் புகைப்படங்களையோ தொலைக்காட்சியில் வரும் காட்சித் தொகுப்புகளை  வைத்தோ புரிந்துகொள்ள முடியாது. அத்தகைய வரலாற்று அடையாளங்களை நேரில் போய் பார்க்க வேண்டும். நேரில் சென்று பார்வையிடுவதற்கும், அந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள் குறித்த கூடுதல் தகவல்களையும்தான் இந்தத் தொடரில் வரும் இதழ்களில் பார்க்கவிருக்கிறோம். எல்லாருக்கும் பரிட்சயமான, கேள்விப்பட்ட இடங்களைத்தான் நாங்கள் இந்தப் பகுதியில் சொல்லவிருக்கிறோம். ஆனால், இதுவரை நீங்கள் பார்க்காத புகைப்படங்கள், நீங்கள் கேள்விப்படாத புது தகவல்களை நாங்கள் இங்கு தொகுத்திருக்கிறோம். வாருங்கள்.. வரலாறை ருசிப்போம்.
மராட்டிய மாநிலம் என்று சொன்னவுடனேயே மகாவீரர் சத்ரபதி சிவாஜியும். அவர் சிறுவயதாக இருக்கும்போது, அவருக்கு வீரக்கதைகளை சொல்லி வளர்த்த அவர் தாய் புத்திலிபாய் பெயரும்தான் நமக்கு ஞாபகம் வரும். அப்படிப்பட்ட வீரரின் வாழ்க்கையை பறைசாற்றும் வகையில் இன்றுவரை கம்பீர தோற்றத்தில் காட்சியளிக்கிறது சிவாஜியின் தலைநகராகத் திகழ்ந்த ராய்கட் மலைக்கோட்டை. கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட இந்த மலைக்கோட்டை, சீனப் பெருஞ்சுவரின் மினியேச்சர் என்று கூட சொல்லலாம்.
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் இருந்து தெற்காக 210 கி.மீ., தொலைவில், சஹாயத்ரி மலைப் பகுதியில், ஈட்டி வடிவ பாறைகளின் மீது 5.12 சதுர கிலோமீட்டர் பரப்பில் விரிந்து பரந்துள்ளது ராய்கட் கோட்டை. ஆரம்பத்தில் ரெய்ரி என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதியை கி.பி.1656ஆம் ஆண்டு கைப்பற்றிய சிவாஜி ராய்கட் என்று புதுப்பெயர் சூட்டினார். நண்பர்கள் எளிதாக வரும் வகையிலும், எதிரிகள் நுழைய முடியாதபடியும், கோட்டையை அமைக்க வேண்டும் என்று ராஜதந்திர நோக்குடன் சிவாஜி அளித்த உத்தரவுப்படி அபாஜிசோன்தேவும் ஹிரோஜி இந்துல்கரும், ஒரே ஒரு குறுகிய வழிப்பாதை கொண்ட இந்த கோட்டையை உருவாக்கினார்.
வரலாற்று சிறப்புமிக்க சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகம் கி.பி.1674ல் இங்குதான் நடந்தது. இதே கோட்டையில்தான் 1689ல் சிவாஜி மரணமடைந்தார். சிவாஜியின் மகன் சாம்பாஜியிடம் இருந்து இந்த கோட்டையை 1689ல் முகலாயர்கள் கைப்பற்றினர். பின்னர், 1818ஆம் ஆண்டில் இதை பிரிட்டிஷார் கைப்பற்றினர்.
கோட்டைப் பகுதியில் பிரமாண்டமான சுற்றுச்சுவர்கள், அரண்மனைகள், சிவாஜி வழிபட்ட ஜகதீஸ்வரர் கோயில், தர்பார் மண்டபம், அரியணை, பெண்களுக்கான அரண்மனைகள், எதிரிகளைக் கண்காணிக்க வசதியாக 12 மாடிகள் கொண்ட கோபுரங்கள், பாதாளச் சிறைகள், சந்தைப் பகுதி கட்டடங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் சிதிலங்கள் இந்திய வரலாற்றின் மகத்தான காலகட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
அரசவைப் பெண்கள் வருவதற்காகவும், அரசக் குடும்பத்து பெண்கள் வருவதற்காகவும் இந்தக் கோட்டையில் சிறப்பு வழி அமைக்கப்பட்டிருக்கிறது, மீனா தர்வாஜா என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நுழைவாயிலை ஒட்டி 6 முக்கிய அறைகள் இருக்கின்றன.ஒன்று சிவாஜியின் தாயான புத்தலி பாயுக்கும் மற்றும் உள்ள ஐந்து அறைகள் அரசக் குடும்பத்து மகளிர்கள் தங்குவதற்கும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
ராணி தர்வாஜாவின் முன் பகுதியின் பால்கி தர்வாஜா அமைந்திருக்கிறது. இது மகாராஜா சிவாஜி வந்து செல்வதற்கான நுழைவாயிலாக அமைந்திருக்கிறது. அந்த நுழைவாயிலை ஒட்டி 8 அறைகள் இருக்கின்றன. இந்த எட்டு அறைகளும் அரண்மனையின் தானியக் கிடங்குகளாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். தானியக் கிடங்குகளுக்கு வலது புரத்தில்தான் சிவாஜி மகாராஜாவின் கோட்டை ஆரம்பிக்கிறது. ராஜ் பவன் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதிதான்  அன்றைய சிவாஜி மகாராஜாவின் சந்தோஷம், துக்கம், வெற்றி, தோல்விகள், சட்டம் இயற்றும் இடமாக இருந்திருக்கிறது. அதற்கான அடையாளங்கள் இன்னும் மிச்ச சொச்சத்தை நேரில் சென்றால் காணலாம்.
ராஜ்பவன் கோட்டையின் உட்புறத்தில் மிகப்பெரிய தண்ணீர் தொட்டிகள் இருக்கின்றன. சத்ரபதி சிவாஜி குளிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அந்த தொட்டிகளின்  அருகே அன்றைய காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மிக  நவீன கழிவறைகளும் இருக்கின்றன. ராஜ் பவனின் கிழக்குப் பகுதியில் பாதாள அறைகள் இருக்கின்றன. இதில்தான் சிவாஜி தன் போர்த் திட்டங்களை முக்கிய தளபதிகளுடன் விவாதித்ததாகவும், தன்  இஷ்ட மாதாவான பவானி தெய்வத்தை அங்குதான்  வழிபட்டதாகவும், சூரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை இங்குதான் சிவாஜி மறைத்து வைத்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த மலைக்கோட்டையின்  சிறிது தொலைவில் உள்ள சித் தர்வாஜா கிராமத்தில் சிவாஜியின் தாய் ஜீஜாபாயின் சமாதி உள்ளது. கோட்டைக்குள் சிவாஜியின் சமாதி உள்ளது. கோட்டைக்குள் ஒரு ஆச்சர்யம். சிவாஜி வாக்யா என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்தார். இந்த நாய் என்றால் சிவாஜிக்கு கொள்ளைப் பிரியமாம். திடீரென்று இந்த நாய் இறந்துவிட ரொம்பவே சோர்ந்துவிட்டாராம். நாயின்  பிரிவை தாங்க முடியாதவர், தான்  தினமும் விழித்தவுடன் தன் செல்லப்பிரானியான வாக்யாவின் முகத்தில்தான் விழிக்கவேண்டும் என்பதற்காகவும், அதன் ஞாபகர்த்தமாகவும் வாக்யாவின் தத்ரூப சிலையை அரண்மனை சிற்பியின் மூலம் செய்தார். வாக்யாவின் சிலையும் இந்த மலைக்கோட்டையில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது.


Saturday, November 26, 2011

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இன்டீரியர் டெக்கரேஷன்!





 ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருக்கத்தானே செய்யும். அந்த ஆரம்ப ரகசியம் என்ன என்பதுதான் இப்போதைக்கு எல்லோருடைய தேடலும். இதுதான் முடிவு என்று எதையும் சொல்லிவிடாதபடிதான் மனிதர்கள் குறித்த நம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சொல்கின்றன. தொடக்க காலத்தில் மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்திருப்பான்? தற்போது பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் இதே இயல்புடன்தான் ஆதிமனிதன் இருந்திருப்பானா? அல்லது நம்மைவிட திறமைசாலிகளாகவும், அதி புத்திசாலிகளாகவும் இருந்திருப்பானா? என்ற தேடல்கள் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு நொடியும் நடந்துகொண்டிருக்கின்றன.
 தற்போதைய மனிதனின்  ரசனைத்தன்மையும், ஆதிமனிதனின் ரசிப்புத் தன்மையும் எப்படி இருந்தது என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைதான் இது. ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் ரசனைக்குத் தகுந்தவாறு வீட்டை அமைத்திருப்போம். வரவேற்பரை ஆரம்பித்து, வீட்டு சமையல் அறை உள்பட அனைத்து அறைகளிலும், தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு அறைகளை அழகுப்படுத்தி பார்ப்பது மனிதனுடைய இயல்பு. இந்த இயல்பு நம் முன்னோர்களுக்கு இருந்திருக்குமா? இருந்திருக்கும் ஆனால், கொஞ்சம் குறைச்சலாக இருந்திருக்கும். ஏனெனில் இப்போது இருக்கும் வசதிவாய்ப்புகள் அப்போது இல்லையே! என்றுதான் நம் மனம் சொல்லும். ஆனால், நாம் நினைப்பது முற்றிலும் தவறு. நம்மைவிட வீட்டை அழகுப்படுத்துவதில் நம்மைவிட ரசனைத்தன்மையும், ரசிப்புத் தன்மையும் நம்மைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. அந்த நாடு இந்த நாடு என்று ஆராய்ச்சியை நோக்கியே நாம் செல்லவேண்டாம்.
நாம் தினமும் வணங்கும் கோயிலுக்குச் சென்று பாருங்கள். நம் முன்னோர்களின் ரசிப்புத் தன்மை தெரியும். கரிகாலன் கட்டிய கல்லணை ஆரம்பித்து, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் வரை மலைக்கத்தானே செய்கிறது. இந்த அளவு தொழில்நுட்பம் அப்போது இல்லை. இந்த அளவுக்கு வாகன வசதிகளோ, நவீன கருவிகள் இல்லாதபோது, அவ்வளவு பெரிய கல்லணையும், இவ்வளவு பிரமிக்க வைக்கும் கோயிலை அவர்களால் கட்ட முடிந்திருக்கிறது. இடி, மின்னல், பல இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி இன்னும் அவர்களின் கட்டடக்கலையை நாம் ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் நம்மைவிட அறிவியலில் சிறந்தவர்களாத்தானே இருக்க முடியும். ஆனால், இன்று அதைப்போல் ஒன்றுகூட நம்மவர்களால் அமைக்க முடிவதில்லையே. இந்த விஷயங்களை மட்டும் ஒப்பிட்டு பார்க்கும்போது, நம்முடைய ரசிப்புத் தன்மையுடைய நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த நம் முன்னோர்கள் ரசிப்புத் தன்மையும், அறிவியல் அறிவும் நம்மைவிட அதிகமாக பெற்றிருந்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
வாழ்க்கையின் சூட்சுமத்தையும், இல்லறத்தின் ரகசியத்தையும், ஒரு சில சிற்பங்களால் காட்டத் தெரிந்திருக்கிறது என்றால் நம்மைவிட எல்லா விஷயத்திலும் அறிவுப்பூர்வமானவர்களாகத்தானே இருந்திருக்கவேண்டும். இம்மாதிரியான பல கேள்விகள்தான்  ஆராய்ச்சியாளர்களின் மண்டையையும் குடைந்துக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்திலும், அறிவியலிலும் நம்மைவிட நம் முன்னோர்கள் விஞ்சியவர்களா என்பதை தெரிந்துகொள்வதைவிட அவர்களின் ரசிப்புத் தன்மையை மட்டும் சரியாக கணித்துவிட்டால், அவர்களின் அறிவியல் அறிவை எளிமையாக கண்டுபிடித்துவிடலாம் என்பதுதான் அறிவியலாளர்களின் கருத்து. அந்த அடிப்படையில்தான்  அந்த ஆராய்ச்சியும் நடந்தது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் அமைந்துள்ளது விட்வாட்டர்ஸ்ட்ராண்ட் எனும் பல்கலைக்கழகம் இந்த பல்லைக்கழகத்தில் மனிதனின் ரசனை குறித்த ஆராய்ச்சிக் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தது பேராசிரியர் கிறிஸ்டோபர் ஹென்சில்வுட் தலைமையில் அமைந்த  ஆய்வுக்குழு. மனிதன் ரசிப்புத் தன்மை நவீன காலத்தில்தான் அதிகம். ஆதி மனிதர்களுக்கு நம்மைவிட ரசிப்புத் தன்மை குறைவுதான் என்பதுதான் இவர்களின் ஆய்வுக்கான அடித்தளம். இதுசம்பந்தமான ஆய்வுக்கான பயணத்திற்கு கிறிஸ்டோபர் கிளம்பும்போதே இன்று தனக்கான விடை கிடைத்துவிடும் என்று அதிதீவிர நம்பிக்கையுடன் தன் சகாக்களுடன் பயணித்தார். தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுண் பகுதிக்கு அப்பால் காடும், மலையும் சூழ்ந்த பகுதியை அவர்கள் நெருங்கியிருந்தார்கள். இருள் சூழ ஆரம்பித்திருந்தது. அந்த அடர்ந்த காட்டின் உள்ளே உள்ள குகைகள்தான் இவர்களின் ஆராய்ச்சிக்கான பகுதி. அதைத் தேடித்தான் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்தார்கள். இருள் சூழ ஆரம்பித்திருந்ததால், மறுநாள் காலை பயணத்தை தொடர்ந்துகொள்ளலாம் என்று கிறிஸ்டோபர் சொல்ல  மற்றவர்களும் ஆரம்பித்தார்கள். கூடாரத்தை அமைக்க முற்படும்போது, குழுவின் இருந்த ஒருவர் தூரத்தில் ஒரு குகை தெரிவதுபோல் இருக்கிறது. இங்கு கூடாரம் அமைத்து தங்குவதற்கு அங்கு போய் ஓய்வு எடுக்கலாமே என்று சொல்ல, ஆய்வுக் குழுவினர் அந்த குகையை அடைந்தார்கள்.
கும்மென்று இருட்டு. வவ்வால்களின் சத்தம், வண்டுகளின் ரீங்காரத்தைத் தவிர நிசப்தமாக இருந்தது அந்தப் பகுதி. கொண்டு வந்த விளக்குகள் உதவியுடன் படுத்து உறங்குவதற்கான பணிகளை குழுவினர் மேற்பார்வையிட கிறிஸ்டோபர் தன்  கையில் வைத்திருந்த டார்ச் விளக்கின் ஒளியை குகையின் மேற்புறச் சுவற்றின் மேல் பாய்ச்சினார். கரடுமுரடாக இருந்த கற்களுக்கு ஊடே சிவப்பும் கறுப்புமாக நெளிவு சுளிவுகளாக கோடுகள். இது ஆதிமனிதன் விட்டுச்சென்ற மனிதர்களின் ரசனை வடிவங்கள் என்று அப்போது அவருக்கு தெரியவில்லை. அசதியில் படுத்து தூங்கிவிட்டார்கள். பொழுது புலர ஆரம்பித்தது. ஓரளவு குகைக்குள்  சூரிய வெளிச்சம் ஊடுருவ ஆரம்பித்திருந்தது. டக்கென்று விழிப்புத் தட்டியது கிறிஸ்டோபருக்கு. உடனடியாக லென்சும், பிரஷ்ஷும் சகிதமாக குகையின் மேற்புறத்தை நோட்டமிட ஆரம்பித்தார். நிச்சயமாக ஆதி மனிதனின் கைவண்ணம்தான் என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார். குகையின் படிகத்தை எடுத்து ஆராய்ச்சிக்கு அனுப்பியபோது, அது ஒரு லட்சம் ஆண்டுக்கு முந்தையது என்பது கிறிஸ்டோபருக்கு தெரியவந்தது. ஆச்சர்யம் தாங்கவில்லை கிறிஸ்டோபருக்கு. ஒரு லட்சம் ஆண்டுக்கு  முந்தைய மனிதர்கள் இப்படி ஒரு ஓவியம் எப்படி வரைய முடிந்தது என்பதுதான் அவருக்கு ஏற்பட்ட ஆச்சர்யத்திற்கு காரணம். ஓவியத்தில் அப்படி ஒரு நுணுக்கம். இப்படி ஓவியம் வரைய தனிப்பட்டக் கருவிகள் பயன்படுத்தியிருக்கவேண்டும். ஓவியத்திற்கான கலவைகள் எப்படி தயாரித்திருப்பார்கள் என்பது போன்ற விஷயங்கள் கேள்விகளாக கிளம்பவே குகைகளைச் சுற்றி தொடர் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. விலங்குகளின் கூறிய எலும்புகள், கற்களின் கூழ் இவற்றைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள் என்பதற்கு அகழ்வாராய்ச்சியில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அதிசய மக்கள் எச்சம் சொச்சமாக கிடைத்தது சின்ன சின்ன அடையாளங்கள் கிடைத்தது கிறிஸ்டோபருக்கு.
ஆய்வின்  கடைசியில் கிடைத்தது, ஆதி மனிதர்கள் வாழ்ந்த பிளாம்போஸ் குகைதான் அது. அவர்கள் பல ஆண்டுகள் தன் வாரிசுகளுடன்  வாழ்ந்த பகுதியாகத்தான் அது இருந்திருக்க வேண்டும். தாங்கள் வாழ்ந்த பகுதியை கலைவண்ணத்துடன் இருக்கவேண்டும் என்று அவர்கள் செய்த இண்டீரியர் டெக்கரேஷன்தான் அந்த ஓவியங்கள் என்பதுதான் கிறிஸ்டோபரின் அளித்த ஆய்வறிக்கையின் முடிவு. நம்மைவிட சிறந்த வகையில் யோசித்திருக்கிறார்கள். இருக்கும் உபகரணங்களை எப்படி வேறு வகைகளில் பயன்படுத்தலாம் என்று அவர்களுக்கு யோசிக்கத் தெரிந்திருக்கிறது என்பதுதான் கிறிஸ்டோபரின் ஆய்வு முடிவு.
இதுவரை நாம் பார்த்த ஆராய்ச்சிகளும், ஆராய்ச்சி முடிவுகளும் சொன்ன விஷயம்தான் இந்தக் கட்டுரையும் சொல்கிறது. விஞ்ஞானமும், அறிவியலும், உச்சத்தைத் தொடாத ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்கூட்டிய அந்த ஆதிமனிதர்கள் கலைநயமும், ரசனைத்தன்மையும் மிக்கவர்களாக இருந்திருக்கும் பட்சத்தில் நம்மைவிட நிச்சயமாக அறிவுஜீவிகளாகத்தானே இருந்திருக்க முடியும். ஆனால், அவர்களை விட அறிவிலும், சிந்தனையிலும் நாம் பின்தங்கியிருப்பதற்கு காரணம் வளர்ச்சியடைந்த அறிவியலாலா? கேள்விகளுக்கான பதிலைத்தேடி ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

Friday, October 21, 2011

நகரத்தின் வயது 5 கோடி!




ஆசைகளுக்கும் எண்ணங்களுக்கும் எப்படி எல்லைகளை தீர்மானிக்க முடியாதோ, அதேபோல் தேடல்களுக்கும் எல்லைகள் கிடையாது. ஏதாவது ஒரு எல்லையை தொட்டுவிட மாட்டோமா.. என்ற தேடல்கள் ஒவ்வொரு அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடம் ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதனை பிழைக்க வைக்க ஆயிரம் ஆயிரம் மருந்தை தேடிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களின் அடுத்த இலக்கு மனிதனுக்கு சாவு என்பதே ஒன்று இருக்கச் செய்யும் சாகா வரத்தை நோக்கித்தான். அது முடியுமா..? ஏன் முடியாது.. முனிவர்களும் சித்தர்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக புராணம் சொல்லியிருக்கிறதே.. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரை இறப்பை தொடாமல் இருக்க அவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? அவர்கள் இப்போதுள்ள ஆராய்ச்சியாளர்களைவிட வல்லமையும், அறிவியலும் தெரிந்தவர்களா? என்ற தேடலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
மனிதனின் சக்தி எப்படிப்பட்டது.. விண்கற்களில் இருந்து விழுந்த பூமிப்பந்தில் மனிதன் எப்போது உருவானான் என்ற தேடலின் ஒரு பகுதிதான் இது..
ஸ்காட்லாந்தின் வடக்குக் கரையருகே வட அட்லாண்டிக் பெருங்கடலின் விரிந்த பரப்பு அது. மிகப்பெரிய ஆராய்ச்சிக் கப்பல். கப்பலின் மேற்பரப்பில் பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த ஆராய்ச்சியாளர் நிக்கி வைட் தனது சகாக்களுடன் நின்றுகொண்டிருந்தார். இந்த குழுவின் முக்கிய நோக்கம், கடலின் ஆழ்பரப்பில் உள்ள எண்ணெய் வளங்கள், பூமி அடுக்கில் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்வதுதான். இதற்காக கப்பலின் தனி அறையில் ஆழ்கடலின் தன்மைகளை மீ ஒலி மற்றும் அதிநவீன எக்கோ ஒலிக்கருவிகளின் உதவிகளோடு ஆய்வு நடத்தி, அட்லாண்டிக் கடல் அடிப்பரப்பின் தன்மைகளை அறிக்கையாக அளிப்பதே இக்குழுவின் பணி.
அன்றும் அப்படித்தான் அவர்களின் பணி இருந்தது. பரந்து விரிந்த அட்லாண்டிக் கடல் பரப்பு இவர்கள் பயணிக்கும் கப்பலின் சத்தமும், தண்ணீர் கிழித்துச் செல்லும் சத்தத்தைத் தவிர எதுவும் இல்லை. ரம்மியமான மாலை மயங்கும் நேரம். ஆராய்ச்சிக் குழுவினர், அதிநவீன எக்கோ ஒலிக்கருவிகள் மூலம் அட்லாண்டிக் கடல் பரப்பின் ஆழத்தின் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் ஆழத்தில் ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பாறைகளின் தன்மைகள், மணல் படிமங்களின் தன்மைகள் பொறுத்து எக்கோ ஒலிக் கருவிகளின் வழக்கமாக கேட்கும் ஒலியின் தன்மைகள் சற்றே வித்தியாசமாய் இருந்தது அன்று. ஒலியின் வித்தியாசம் கருவியின் கோளாறாய் இருக்கும் என்று சந்தேகித்துக்கொண்டிருக்க, கடலடியில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் எக்கோ கருவியுடன் பொருத்தியிருந்த காமிரா, கப்பல் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த திரையில் படங்களை அனுப்பிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த ஆராய்ச்சிக் குழுவினருக்கு, தங்கள் கண்களால் பார்ப்பது கனவா அல்லது நனவா என்றே நம்ப முடியவில்லை. ஏனெனில் அவர்கள் கடல் அடியில் கண்டது மிகப்பெரிய மாநகரத்திற்கான தடயங்கள்.. கொஞ்சம் கூட தாமதிக்காமல், சில ஆராய்ச்சியாளர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் பாய்ந்தார்கள்.
கடலுக்குள் குதிக்கும்வரை, ஏதோ எரிமலை வெடித்து அது பாறையாக பல மீட்டர் தூரத்திற்கு பரவியிருக்கலாம் என்பதுதான் அவர்களின் கணிப்பு. ஆனால், அத்தனையும் தகர்த்தது, அவர்கள் அப்போது கண்ட காட்சி. இதுகுறித்து, நிக்கி வைட் கூறும்போது அவரின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
எங்கள் குழு கொஞ்சம் கூட நம்பவில்லை அந்த காட்சியை. கிட்டத்தட்ட 10 ஆயிரம் சதுர கி.மீட்டர் தூரம் வரை நீண்டு கிடந்தது நாங்கள் கண்ட அந்த நிலப்பரப்பு. கண்டிப்பாக அது எரிமலையின் சாம்பல் படிவம் இல்லை. அது மிகப்பெரிய நகரம்தான். அதனுடைய சில பாகங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு அனுப்பினோம். நாங்கள் கணித்தது சரிதான். கார்பன் வயது கணிப்புப் பஐ, கிட்டத்தட்ட 5 கோடியே 60 லட்சம் ஆண்டுக்கு முந்தைய நகரமாக அது இருக்கும் என்று ஆராய்ச்சியில் கணித்திருக்கிறார்கள். அந்த நிலப்பரப்பு, மேற்கு ஆர்க்னே நகரத்தில் இருந்து ஷெட்லேண்ட் தீவு வரை விரிந்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இதனுடைய பெரும்பகுதி ஸ்காட்லாந்தின் ஒரு பகுதியில் ஆரம்பித்து நார்வே வரையிலும் இருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் திட்டமிட்டு மிக நாகரிகமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த நகரம், ஒரு வரைபடம் போலவே காட்சியளிக்கிறது. அந்த நிலப்பரப்பு படிமத்தில் கிட்டத்தட்ட 8 நதிகள் ஓடிய தடயங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். புதைந்து கிடக்கும் நகரத்தின் எஞ்சிய சில ஆதாரங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, 5 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த ஆழ்கடலில் புதைந்து கிடக்கும் நகரத்து மக்கள் மிகவும் நாகரிகமாகவும் அதே நேரத்தில் கல்வியில் சிறந்தவர்களாகவும் இருந்திருக்கக்கூடும் என்று நம்புகிறோம். இப்போது நினைத்தாலும் புல்லரித்துப் போகிறது என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர் நிக்கி வைட்.
ஆயிரம் ஆயிரம் மக்களின் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், கண்டுபிடிப்புகள், சில வீர வரலாறுகள் அட்லாண்டிக் கடலில் எப்படி மூழ்கி போயிருக்கும்..? ஒரே சுனாமியில் அழிந்து போயிருக்குமா..? அல்லது புவி வெப்பமயமாதல் போன்ற ஏதேனும் ஒரு பிரச்சினையால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து அழிந்து போயிருக்குமா..? ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கு விடை தேட ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசைகள், கனவுகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த நகரம்.. 2 கி.மீ. கடல் அடிப்பரப்பில் புதைந்துபோய் இருக்கிறது என்றால், இன்னும் 5 கோடி ஆண்டுகள் கழித்து பூமிப்பந்தில் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிக்கும் பல்வேறு நகரங்களும் இதேபோல்தான் காணாமல் போகுமா..? இன்று புவிவெப்பமயதாலால் சர்வதேச நாடுகளே அச்சம் கொண்டு தங்களை பாதுகாக்க பல்வேறு காரணிகளைத் தேடிக்கொண்டிருப்பது பனிப்பாறைகள் உருகி.. கடல் மட்டம் உயர்ந்து மிகப்பெரிய அழிவை சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகத்தானா..? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஒருவேளை மனித நாகரிகமும், மனிதனின் பிறப்பு ரகசியமும் அட்லாண்டிக் கடலடி பரப்பில்தான் ஒழிந்து கிடக்குமா.. என்ற கேள்விக்கான பதிலையும் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். விடை கிடைக்குமா...?

Thursday, September 15, 2011

புவிவெப்பமயமாதல் ஓர் அமானுஷ்யம்!






வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது, தற்போது நடந்துகொண்டிருப்பது பிரமிப்பாக இருக்கும். நாம் எதுவெல்லாம் நடந்திருக்காது. இருந்திருக்காது என்று நினைக்கிறோமோ அதெல்லாம் அப்போது நடந்திருக்கிறது என்பதே பிரமிப்பான விஷயம்தான்.
அப்படி ஒரு விஷயத்தைத்தான் நீங்கள் இப்போது படிக்கப் போகிறீர்கள். சமூக ஆர்வலர்கள் ஆரம்பித்து எல்லோர் வாயும் முணுமுணுக்கும் வார்த்தை சுற்றுப்புற சீர்கேடு. அதிலும் குறிப்பாக குளோபல் வார்மிங் என்ற வார்த்தையை சொல்லாதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். குளோபல் வார்மிங் என்றால், பூமி கட்டுங்கடாங்காத வெப்பம் சூழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். சுருக்கமாக புவி வெப்பமயமாதல். குளோபல் வார்மிங் பிரச்சினையால் பச்சை வீட்டு வாயு அதிகளவில் வெளியேறுவதால் ஓசோன் படலம் ஓட்டை விழுந்து புற ஊதாக் கதிர்களும், அகச்சிவப்பு கதிர்களும் நேரடியாக பூமியைத் தாக்கும். இதனால், மனிதர்களுக்கு தோல் புற்றுநோய்கள் ஆரம்பித்து, வித்தியாசமான உயிர்க்கொள்ளி நோய்கள் எல்லாம் ஏற்படும் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகள்.
புவி வெப்பமயமாதல் எப்படி ஏற்படுகிறது? இந்தக் கேள்விக்கு கண்டிப்பாக உங்களுக்கும் பதில் தெரியும். இருந்தாலும் கூடுதலா தெரிஞ்சு வச்சிக்கோங்க. வீடு, அலுவலகங்கள், கார், பஸ்களில் பயன்படுத்துகிற ஏ.சி., பிரிட்ஜ் சாதனங்களில் இருந்து வெளிவரும் குளோரோ புளுரோ கார்பன் என்னும் வாய்வுதான் இந்த புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம்னு சொல்றாங்க. பூமியைப் பாதுகாக்கும் படலத்துடன், இந்த வாயு வினைபுரிந்து அதை ஓட்டை விழச் செய்கிறது. அதனால், கட்டுக்கடங்காத வெப்பம் பூமியைத் தாக்குகிறது. இந்த வெப்பத்தின் அளவு எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால், துருவத்தில் உள்ள ஐஸ் மலைகள் உருகும். கடல் நீர்மட்டம் உயரும். இதனால், பல்வேறு கண்டங்கள் அழிந்து போகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவான சுனாமி கூட புவி வெப்பமயமாதலால்தான் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உலக நாடுகள் , மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு மின்சாரத்தை வழங்குவதற்காக, அணு உலைகளை அமைத்து வருகிறது. இதிலிருந்து வெளியேறும் கார்பன் துகள்கள், பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்கள், எந்திரங்களில் இருந்து வெளியேறும் கார்பன் துகள்களால்தான் புவிவெப்பமயமாதல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இன்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த புவி வெப்பமயமாதல் வாகனப் பெருக்கம், அணு உலைகள் பெருக்கம், குளிர்சாதன வசதிகளின் பயன்பாட்டினால்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க, அதெல்லாம் சுத்தமாய் பொய் என்று சொல்லும் அளவிற்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் இருக்கிறது.
1799 ஆம் ஆண்டு தாமஸ் ஜெபர்சன் என்பவர் அமெரிக்க செனட்டில், புவி வெப்பமயமாதல் குறித்த பிரச்சினையை கிளப்புகிறார். பூமியில் கட்டுக்கடாங்காத கார்பன் வாயுக்களால் பூமிப் பந்து வெப்பத்தால் கட்டுண்டு கிடக்கிறது. இதனால், துருவங்களில் இருக்கும் பனிச் சிகரங்கள் உருகி அமெரிக்காவிற்கு ஆபத்து நேர்ந்துவிடும். எனவே இந்தப் பிரச்சினையை அரசு உடனடியாக கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அமெரிக்க அதிபராய் பதவி வகித்தது, ஜான் ஆடம்ஸ். தாமஸ் ஜெபர்சன், 1779 முதல் 1781 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தின் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் மூன்றாவது அதிபரும் அவர்தான். இவ்வளவு முக்கிய நபரான தாமஸ் ஜெபர்சன் வெளியிட்ட இந்த செய்திக் குறிப்பு கண்டிப்பாக பொய்யாக இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், பூமி வெப்பமயமாதலுக்கு காரணம் என்று நாம் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறோமே... அணு உலைகள், குளிர்சாதனங்கள், மற்றும் பெட்ரோல், டீசலால் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள். அவைகள் எல்லாம் 1799ஆம் ஆண்டு தாமஸ் ஜெபர்சன் அறிக்கை வெளியிடும்போது பயன்பாட்டிலேயே கிடையாது என்பது ஆச்சர்யமான விஷயம்.
ஆம்.. உண்மைதான். மின்சாரத்திற்காக மட்டும் நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அணு உலைகள், உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது 1954ஆம் ஆண்டுதான். அதேபோல குளோரோ புளோரோ கார்பனை வெளியேற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் என்று சொல்வதைவிட குளிர்சாதனப் பெட்டி குறித்த யோசனையை முதன்முதலில் 1758ஆம் ஆண்டு பெஞ்சமின் பிராங்க்ளின்தான் வெளியிட்டார். அவர் அப்போது அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியராக இருந்தார். அவரும் குளிர்சாதனப் பெட்டிக்கான கொள்கைகளை வகுத்துக் கொடுத்தாரே தவிர முழுமையாக வடிவமைக்கும் பணியில் அவர் ஈடுபடவே இல்லை.
ஆனால் அதற்குப் பிறகு 1820ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் மைக்கேல் பாரடே என்னும் அறிவியல் விஞ்ஞானிதான் அம்மோனியாவை பயன்படுத்தி குளிர்விப்பானை உருவாக்கலாம் என்று யோசனையை சொன்னதுடன், அதன் வடிவமைப்புப் பணிகளிலும் முதன்முதலாக ஈடுபட்டார். இருப்பினும் குளிர்சாதனப் பெட்டி, மற்றும் குளிர்சாதனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது என்னவோ 1880ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் என்று வரலாறு சொல்கிறது. அதேபோல 1800ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வதேச அளவில் கார்கள், வாகனங்கள் எல்லாமுமே நீராவியில்தான் ஓடியிருக்கிறது. முதல் முறையாக எண்ணெயை பயன்படுத்தி நீராவியால் ஓடும் கார் 1815ஆம் ஆண்டுதான் பயன்பாட்டிற்கு வந்தது. பெட்ரோலை பயன்படுத்தி ஓடும் வாகனம் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது 1838ஆம் ஆண்டுதான்.
மேற்சொன்ன கண்டுபிடிப்புகளும், அதன் காலங்களையும் வைத்துப் பார்க்கும்போது, 1790ஆம் ஆண்டுகள் என்பது பெட்ரோல், குளிர்சாதனப் பெட்டி, அணு உலைகள் எதுவுமே பயன்பாட்டிலேயே இல்லாத காலகட்டம். ஆனால், 1799ஆம் ஆண்டு புவி வெப்பமயமாதல் குறித்து மிகவும் பயங்கரமான ஒரு அறிக்கையை முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெபர்சான் தாக்கல் செய்திருக்கிறார் என்றால், இப்போது புவிவெப்பமயமாதலுக்கு காரணமான விஷயங்களாக விஞ்ஞானிகள் சொல்லும் காரணிகள் பொய்யா? அல்லது 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் அல்லது அதற்கும் முந்தைய மக்கள் பூமிப்பந்தை தாக்கும் அளவிற்கு வெப்பத்தை கிளர்ச்சியடைய செய்யும் அளவிற்கு மாறுபட்ட கருவிகளை பயன்படுத்தி இருந்தார்களா? றஎவைதான் உண்மை... அல்லது 1700ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் விஞ்ஞானத்தில் நம்மைவிட விஞ்சியவர்களா? விந்தையான பல கேள்விகள்.. நம்மை துளைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கு வைக்கப்பட்டிருக்கும் கேள்விகள் குறித்த ஆய்வுகள் சர்வதேச அளவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

Friday, August 19, 2011

முன்னோர்கள் விட்டுச்சென்ற டாட்டூஸ்!






இந்த பிரபஞ்சம் முழுவதும் விசித்திரம் நிறைந்து கிடக்கிறது. இன்று எதெல்லாம் புதுமை, கண்டுபிடிப்பு என்று தலையில் வைத்துக்கொண்டாடுகிறோமோ அதெல்லாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்திருக்கிறது. அப்படியானால், நம்மைவிட முன்னோர்கள் திறமையானவர்களா, இன்று நமக்கு கிடைக்கும் அத்தனை வசதிவாய்ப்புகளும் அவர்களுக்கும் கிடைத்திருக்குமா என்ற சந்தேகமும் நம் முன்னால் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
நம் தாத்தாப் பாட்டிக் காலங்களில் பச்சைக் குத்துவது என்பது சர்வ சாதாரணம். அது அப்படியே நாகரிகம் கருதி கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது. ஆனால், இன்று மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் இளைஞர்களும், இளைஞிகளும் கை, கால் ஆரம்பித்து உடம்பில் சகல இடங்களிலும் டாட்டூஸ் வரைந்துகொள்கின்றனர். இன்று நம் இளைஞர்கள் எது பேஷன் என்று கலர் கலராய் உடலில் வரைந்துகொள்கிறார்களோ, அதே டாட்டூஸ் 5000 ஆண்டுகளுக்கு முன், ஒரு இனத்தின் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினரை தனியே பிரித்துக் கண்டறியும் ஒரு அடையாளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொன்னால்... அது வியப்புக்குரிய விஷயம்தானே!.
பிரிட்டனில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் ஜோன் பெட்ச்சர். ஜோனுக்கு மனித நாகரிகம் பற்றிய வளர்ச்சியை தெரிந்துகொள்வதில் எப்போதும் ஒரு தேடல்தான். அதனால், பல்கலைக்கழகத்துக்கு வருவது என்னவோ சொர்ப நாள்கள்தான். பெரும்பாலான நாட்கள் தன் ஆராய்ச்சி மாணவர்களுடன் ஊர் ஊராக சுற்றுவதுதான் அவருக்கு வேலை. அப்படித்தான் அன்றும் நடந்தது. 1991ஆம் ஆண்டு. இத்தாலிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பனிக்கொட்டும் ஆல்ப்ஸ் மலை அது. அந்த மலைதான் ஜோனுக்கு மனித நாகரிகத்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி இடமாக இருந்தது. மலைகளின் பல இடங்களில் தோண்டிப் பார்த்தாகிவிட்டது. கிடைத்தது என்னவோ, மலை ஆடுகளின் எலும்புகளும், விலங்குகளின் படிமங்களும்தான். ஆனால், அந்தப் படிமங்கள் அனைத்தும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துகிடந்த படிமங்கள்தான். இருந்தாலும் மனம் தளரவில்லை ஜோன். அந்தப் பனிப் பிரதேசத்தின் ஒரு மூலையில் விசித்திரமான ஒரு ஐஸ்கட்டி பாறைகளுக்கு இடையில் கிடந்ததைப் பார்த்தார். அந்த விசித்திர ஐஸ் கட்டியை எப்படியாவது உடைத்துப் பார்த்துவிட வேண்டும். அதில் நம் தேடலுக்கான விடை கிடைக்கலாம் என்பது ஜோனின் எண்ணம். பாறைகளுக்கு ஊடே சிக்கிக் கிடந்த அந்த விசித்திர ஐஸ் கட்டியை பெரும் பாடுகளுக்கு இடையே ஜோன் தன் மாணவர்களுடன் உதவியுடன் எடுத்தார்.
ஐஸ் பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அது பல ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன ஒரு மனிதன் என்று. ஜோனுக்கு ஒருபுறம் அதிர்ச்சி என்றாலும், மனிதனின் கலாசாரத்தை சொல்லப்போகும் ஒரு பொக்கிஷமாக அந்த சடலம் தெரிந்தது ஜோனுக்கு. பாதுகாப்புடன் தன் சோதனைக் கூடத்திற்கு அந்த சடலத்தை எடுத்து வந்தார். கூடிப்போனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான மனிதனின் சடலமாக இருக்கலாம் என்பதுதான் ஜோனின் கணிப்பு. கார்பன் வயது சோதனைக்கு அந்த சடலத்தை உட்படுத்தியபோது, அந்த சடலம் கிட்டத்தட்ட 5,200 ஆண்டுகளுக்கு முட்பட்டது என்பது தெரிய வந்தது.
5200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சடலம் அப்படியே கிடைத்தது, ஜோனுக்கு ஆச்சர்யம். சடலத்தில் முதுகு, முழங்கால் மற்றும் கணுக்கால், மூட்டு பகுதிகளில் கறுப்பு நிறத்தில் புள்ளிகள் தொடர்ச்சியாய் வட்டமாகவும் கோடாகவும் தெரிந்தது. என்ன என்று தொடர் ஆராய்ச்சியில் ஜோன் ஈடுபட்டபோதுதான் அது டாட்டூஸ் என்பது தெரிய வந்தது. இந்த ஆய்வை ஜோன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தபோது, அக்குபஞ்சர் மூலம் நோய்களை எப்படி தற்காலத்தில் குணப்படுத்துகிறார்களோ அதேபோல ஒரு வைத்தியமுறையாக டாட்டூஸை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்கள். ஆனால், அதுவல்ல உண்மை. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்து மம்மிக்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்தபோது, ஒரு சில பெண் சடலங்களில் இதேபோல டாட்டூஸ் ஓவியங்கள் காண முடிந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுக்கோப்பான வாழ்க்கை அவர்கள் வாழ்ந்திருக்கவில்லை. அதனால், அந்த இனத்தில் சில பெண்களுக்கு பால்வினை நோய் வந்திருக்கலாம். அதனால், அந்தப் பெண்களை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காகவே கைகளிலும் கால்களிலும் அவர்கள் பச்சைக் குத்தியிருக்கலாம். அதன்மூலம் மற்ற ஆண்கள் அவர்களை நெருங்காமல் இருந்திருக்கலாம் என்பது மற்றொரு தரப்பின் ஆராய்ச்சி.
பச்சைக் குத்தும்முறை முற்றிலும் எகிப்திய காலத்தில்தான் உருவானது. எகிப்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது மம்மிக்களுடன் கிடைத்த சில நுண்ணிய ஊசிப் போன்ற பொருள்கள், முற்றிலும் டாட்டூஸ் வரைவதற்கான கருவிதான் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் வரைந்து வைத்திருந்த பெண் ஓவியங்களில் கூட டாட்டூஸ் வரையாமல் விட்டுவைக்கவில்லை. மருத்துவ வசதியில்லாத அந்தக் காலத்தில் கர்ப்பம் தரித்த பெண்கள் பிரசவ காலத்தில் பிரசவ வலியை குறைப்பதற்காகத்தான் இந்த டாட்டூஸ் வரையும் கலாசாரத்தை பின்பற்றியிருக்க வேண்டும். ஏனெனில் கிடைத்த மம்மிக்கள் சடலங்களில் தொடை மற்றும் அடிவயிறு, மற்றும் மார்பகங்களிலேயே அதிகளவில் டாட்டூஸ் வரையப்பட்டிருக்கிறது என்று இன்னொறு ஆராய்ச்சி சொல்ல, இல்லவே இல்லை பெண்கள் மட்டுமல்ல... ஆண்களும் எகிப்திய காலத்தில் டாட்டூஸ் வரையும் கலாசாரத்தை பின்பற்றியிருக்கிறார்கள். அவர்கள் ஓவியம், சிற்பம் வடிப்பதில் கைத் தேர்ந்தவர்கள், அவர்களின் கலை ரசனைக்கான ஒரு அடையாளம் மட்டுமே இந்த டாட்டூஸ் என்கிறது இன்னொரு ஆராய்ச்சித் தரப்பு.
எகிப்து ஆரம்பித்து அதன்பின் கிரீன்லாந்து, சைபீரியா மற்றும் நியூசிலாந்து போன்ற அகழ்வாராய்ச்சியிலும் 1000 ஆண்டுகளுக்கு முன் டாட்டூஸ் வரையப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1700 ஆம் ஆண்டுகள் வாக்கில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக மக்கள் அடிமைகளாகவும், நாடோடிகளாகவும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மூலமாகவே டாட்டூஸ் கலை பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. அதுமட்டுமல்லாமல், இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம் அது. தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டி மலைகளில் ஏராளமான கல்லறைகள். அந்தக் கல்லறையில் சடலங்களாக அடைப்பட்டுக் கிடந்தது மன்னர் குலத்து தளபதிகள். கல்லறைகள் முழுவதும் உறைந்த பணியால் முழுவதும் மூடிக்கிடந்தன. அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு கல்லறைகளை தோண்டினார்கள் அகல்வாராய்ச்சியாளர்கள். அந்த சடலங்களில் பெரும்பாலான சடலங்களில் விளையாட்டு மற்றும் விலங்குகளைக் குறிக்கும் டாட்டூஸ் வரையப்பட்டிருந்தது என்கிறது வரலாறு.
வாணிபம், போர், உள்நாட்டுக் கலவரம் ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இன்று நாம் கொண்டாடும் டாட்டூஸ் வரையும் பழக்கம் பரவியுள்ளது. ஒவ்வொரு ஆராய்ச்சித் தரப்பும் டாட்டூஸிற்கு ஒவ்வொரு காரணங்களை முன்வைத்தாலும், டாட்டூஸ் தோன்றியது எகிப்தில்தான் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளாமல் இல்லை. அப்படியானால், மனித இனத்தின் நவீன ம், பொழுதுபோக்கு, கலைகள் எல்லாவற்றுக்குமே எகிப்துதான் முன்னோடியா...? ஆராய்ச்சிகள் நீள்கிறது!